Last Updated : 24 Jul, 2018 08:53 PM

 

Published : 24 Jul 2018 08:53 PM
Last Updated : 24 Jul 2018 08:53 PM

“2014-ம் ஆண்டுக்குப் பின் சுவிஸ் வங்கியில் இந்தியர்களின் டெபாசிட் குறைந்துள்ளது”: பியூஷ் கோயல் விளக்கம்

2014-ம் ஆண்டில் பாஜக ஆட்சிக்கு வந்தபின், சுவிஸ் வங்கியில் இந்தியர்களின் டெபாசிட் குறைந்துள்ளது. ஆனால், காங்கிரஸ்கட்சியோ 50 சதவீதம் டெபாசிட் உயர்ந்துவிட்டதாகக் கூறுவது முற்றிலும் பொய்யானது என்று மத்திய நிதி அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்தார்.

சுவிட்சர்லாந்து வங்கியில் இந்தியர்களின் டெபாசிட் கடந்த ஆண்டு 50 சதவீதம் உயர்ந்துவிட்டதாக ராகுல் காந்தி குற்றம்சாட்டி இருந்தார். அதற்குப் பதில் அளித்து மத்திய நிதி அமைச்சர் பியூஷ் கோயில் இன்று நிருபர்களுக்கு விளக்கம் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

சுவிட்சர்லாந்து வங்கியில் இந்தியர்கள் வைத்துள்ள டெபாசிட் தொகை 50 சதவீதம் உயர்ந்துவிட்டதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தகவல்களைப் பரப்பிவருகிறார். இது ஆதாரமற்றது. கடந்த 2016ம் ஆண்டு மற்றும் 2017-ம் ஆண்டுக்கு இடையே இந்தியர்களின் டெபாசிட் 34 சதவீதம் குறைந்துள்ளது. கடந்த 2014-ம் ஆண்டில் இருந்து இந்தியர்களின் டெபாசிட் 80 சதவீதம் குறைந்துள்ளது.

ராகுல் காந்தி ஆதாரமற்ற தகவல்களைக் கூறுகிறார் என்று சுவிட்சர்லாந்து அரசு எங்களிடம் தெரிவித்துள்ளது, உண்மையான அறிக்கையையும் அனுப்பியுள்ளது. ஆனால், சிலர் அரசியல் தலைவர்கள் இதற்குச் சிறிதும் தொடர்பில்லாமல் பேசுகிறார்கள்.

சுவிட்சர்லாந்து வங்கியில் இந்தியர்களின் டெபாசிட் இருந்தாலே, அது கறுப்புப்பணம் என்று நினைக்கத் தொடங்கிவிட்டார்கள்.

ராகுல்காந்தி எப்போதும் உண்மையை ஆராயாமல் குற்றம் சொல்லக்கூடிய பழக்கத்தை உடையவராக இருக்கிறார், இப்போது ராகுலின் குற்றச்சாட்டுகளை சுவிட்சர்லாந்து வங்கியே நிராகரித்துள்ளது.

இவ்வாறு பியூஷ் கோயல் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x