Last Updated : 24 Jul, 2018 07:56 PM

 

Published : 24 Jul 2018 07:56 PM
Last Updated : 24 Jul 2018 07:56 PM

“என் வாக்குறுதியை மோடி நிறைவேற்றுவார் என எதிர்பார்த்தேன்”: மன்மோகன்சிங் வேதனை

 

ஆந்திர மாநிலத்துக்குச் சிறப்பு அந்தஸ்து வழங்கப்படும் என்ற ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் வாக்குறுதி, பாஜக தலைவர்களுடன் ஆலோசனை நடத்தப்பட்டுதான் வழங்கப்பட்டது. என் வாக்குறுதியை மோடி நிறைவேற்றுவார் என எதிர்பார்த்தேன் என முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்தார்.

ஒருங்கிணைந்த ஆந்திரா மாநிலம் காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் பிரிக்கப்பட்டு தெலங்கானா மாநிலம் உருவானது. அப்போது, ஆந்திர மாநிலத்துக்குச் சிறப்பு அந்தஸ்து வழங்கப்படும் என காங்கிரஸ் அரசும் உறுதியளித்தது.

அதன்பின் ஆட்சியைப் பிடித்த பாஜக அரசும் உறுதியளித்து. இதை நம்பியே தெலங்குதேசம் கட்சி தேசிய ஜனநாயகக்கூட்டணியில் இடம் பெற்று கடந்த 4 ஆண்டுகளாகச் செயல்பட்டு வந்தது.

ஆனால், 4 ஆண்டுகளாக எந்தவிதமான சிறப்பு அந்தஸ்தும் ஆந்திர மாநிலத்துக்கு மத்திய அரசு வழங்காததால், கூட்டணியில் இருந்து தெலங்குதேசம் வெளியேறியது. அதன்பின் மத்தியஅரசுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை மக்களவையில் கொண்டு வந்தது. ஆனால், அது தோல்வி அடைந்தது.

இந்நிலையில் ஆந்திர மாநிலத்துக்குச் சிறப்பு அந்தஸ்து கொடுப்பது குறித்து மக்களவையிலும், மாநிலங்களவையிலும் தெலங்குதேசம் கட்சி எம்.பி.க்கள் எழுப்பிப் பேசினார்.

மாநிலங்களவையில் நடந்த விவாதத்தின் போது, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் பேசியதாவது:

ஆந்திர மாநிலத்துக்குச் சிறப்பு அந்தஸ்து வழங்கப்படும் என்று தெலங்கானா மாநிலம் பிரிக்கப்பட்ட போது வாக்குறுதி அளித்தோம். அப்போது காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் நான் பிரதமராக இருந்தபோது, அளித்த இந்த வாக்குறுதி பாஜக தலைவர்களுடன் ஆலோசித்த பின்புதான் அளித்தேன்.

கடந்த 2014-ம் ஆண்டு, பிப்ரவரி 20-ம் தேதி ஆந்திரபிரதேச மறுசீரமைப்பு மசோதா குறித்து விவாதம் இதே மாநிலங்களவையில் நடந்தது. அப்போதுதான், ஆந்திர மாநிலத்துக்குச் சிறப்பு அந்தஸ்து வழங்கப்படும் என்ற வாக்குறுதியை இதே அவையில் அளித்தேன்.

இந்த வாக்குறுதி அளிக்கும் முன் அப்போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த பாஜகவின் அருண் ஜெட்லி, உள்ளிட்ட பாஜகவின் மூத்த தலைவர்களுடன் ஆலோசனை நடத்திய பின்புதான் இந்த முடிவை அறிவித்தோம்.

ஹைதராபாத்தில் இருந்து கிடைக்கும் வருவாய் அனைத்தையும் புதிதாக உருவாக்கப்படும் தெலங்கானா மாநிலத்துக்கு அளிக்க வேண்டும் எனத் தெரிவித்தோம். மாண்புமிக்க இந்த அவையில் அளிக்கப்படும் வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட வேண்டும். இதுதான் நாடாளுமன்றத்தின் இயற்கை நீதியாகும். என்னுடைய வாக்குறுதியை எனக்குப் பின் வரும் பிரதமர் மோடி நிறைவேற்றுவார் என எதிர்பார்த்தேன். அந்த அடிப்படையில்தான் அவருடைய நண்பர்களுடன் ஆலோசனை நடத்தி இந்த முடிவை அறிவித்தேன்.

இவ்வாறு மன்மோகன் சிங் பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x