Published : 24 Jul 2018 06:47 PM
Last Updated : 24 Jul 2018 06:47 PM
பசுவை ‘தேச மாதா’ என்று புனிதப்படுத்துவதே பசுக்கொலைகளுக்கு எதிரான கொலைகளைத் தடுக்க ஒரே வழி என்று ராஜஸ்தான் அல்வார் முஸ்லிம் கொலையினால் நாடே கொந்தளித்துள்ள நிலையில் பாஜக தெலுங்கானா எம்.எல்.ஏ. ராஜாசிங் லோத் என்பவர் சர்ச்சைக்கருத்து வெளியிட்டுள்ளார்.
மேலும் பசுக்கடத்தல்காரர்கள் பசுப்பாதுகாவலர்களைக் கொலை செய்வதை ஊடகங்கள் கண்டு கொள்வதில்லை என்றும் புதிய குண்டு ஒன்றைப் போட்டு மேலும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளார்.
7 நிமிட வீடியோ பேச்சில் பசுவை தேசமாதாவாக அறிவிக்க எம்.பி.க்கள் நாடாலுமன்றத்தில் கோரிக்கை எழுப்ப வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
“பசுவை தேசமாதாவாக அறிவிக்காமல் பசுவைப் பாதுகாக்கும் போர் நிற்காது, இதற்காக பசுபாதுகாவலர்கள் சிறையில் அடைக்கப்பட்டாலும், அவர்கள் மீது துப்பாக்கித் தோட்டாக்கள் பாய்ந்தாலும் எதுவும் நிற்காது.
பசுப்பாதுகாப்பு அமைச்சகம் உருவாக்கப்பட்டு ஒவ்வொரு மாநிலத்திலும் சட்டங்கள் முறையாக இயற்றப்பட்டு பசுக்கள் பாதுகாக்கப்படும் வரை, இந்தக் கொலைகள் நிற்காது. இது என் உணர்வு, நான் உண்மையைத்தான் கூறுகிறேன்.
இப்போது வரிந்து கட்டிக் கொண்டு பேசுபவர்கள் பசுக்களை பாதுகாப்பது பற்றி வாயைத் திறக்க மறுக்கிறார்கள். சமீபத்தில் பசுக் கடத்தல் காரர் ரக்பர் கான் கொலை செய்யப்பட்டார், அவர் மீது பசுக்கடத்தல் வழக்குகள் நிலுவையில் இருப்பதாக ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன. பசுப்பாதுகாவலர்கள் கடத்தல்காரர்களால் கொல்லப்படுவதும் நடக்கிறது. ஆனால் ஊடகங்கள் இதனைப் புறக்கணிக்கின்றன.
மாறாக பசுக்கடத்துபவர் கொல்லப்பட்டால் எலெக்ட்ரானிக் ஊடகங்கள் இதனை ஊதிப்பெருக்கி பெரிய விவகாரமாக்குகின்றனர்.
ரக்பர் கான் கொலை செய்யப்பட்ட அதே தினத்தில் காதல்விவகாரத்தில் கேத்தா ராம் பீல் என்ற ஒர் தலித் இளைஞரும் முஸ்லிம் குடும்பத்தினரால் கொல்லப்பட்டார். ஆனால் ஊடகங்களும், மற்ற மதச்சார்பற்ற கட்சிகளும் இதில் ஆர்வம் காட்டவில்லை.
இவ்வாறு கூறினார் பாஜக எம்.எல்.ஏ. ராஜ்சிங் லோத்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT