Published : 24 Jul 2018 04:22 PM
Last Updated : 24 Jul 2018 04:22 PM

லோக்பால் விவகாரம்: “உங்களின் செயல்பாடு எங்களுக்கு முழுமையாக மனநிறைவு அளிக்கவில்லை” - மத்திய அரசைக் கடிந்த உச்ச நீதிமன்றம்

லோக்பால் அமைப்புக்குத் தலைவரை தேர்வு செய்யும் தேர்வுக் குழு நியமிக்கும் விவகாரத்தில் மத்திய அரசின் செயல்பாடு எங்களுக்கு முழுமையாக மனநிறைவை அளிக்கவில்லை என்று மத்திய அரசை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கடிந்து கொண்டனர்.

அரசு அதிகாரிகள், அமைச்சர்கள், அரசு ஊழியர்கள் ஊழல் செய்தால் விசாரிக்கும் அமைப்பாக மாநிலங்களில் லோக் ஆயுக்தாவும், மத்தியில் லோக்பால் அமைப்பும் உருவாக்க வேண்டும் என்று கடந்த 2017-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

ஆனால், பல்வேறு மாநிலங்களில் லோக் ஆயுக்தா மசோதா நிறைவேற்றப்படவில்லை, மத்திய அரசும் லோக்பாலுக்கு நியமிக்கப்படும் நீதிபதியைத் தேர்வு செய்யத் தேர்வுக்குழு அமைப்பதிலும் தாமதம் செய்து வந்தது.

இந்நிலையில், லோக்பால் அமைப்பை இன்னும் அமைக்காத மத்திய அரசுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொண்டு நிறுவனம் சார்பில் தொடரப்பட்டது. இந்நிலையில் கடந்த 19-ம் தேதி பிரதமர் மோடி தலைமையில், லோக்பால் நீதிபதியைத் தேர்வு செய்யும், தேர்வுக்குழு உறப்பினர்களை தேர்வு செய்யும் கூட்டம் நடத்துவதாகத் திட்டமிடப்பட்டு இருந்தது.

இந்நிலையில், இந்த வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ரஞ்சன் கோகாய், ஆர். பாணுமதி, நவின் சின்ஹா ஆகியோர் முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அ ரசு சார்பில் அட்டர்னி ஜெனரல் கே.கே.வேணுகாபால் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்தார்.

அதில், லோக்பால் நீதிபதியைத் தேர்வு செய்யும் தேர்வுக்குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யும் கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் கடந்த 19-ம் தேதி நடந்தது. ஆனால், அந்தக் கூட்டத்தில் எந்த இறுதி முடிவும் எடுக்கப்படவில்லை.

விரைவில் மற்றொரு கூட்டம் நடத்தி, தேர்வுக்குழு உறுப்பினர்கள் நியமிக்கப்படுவார்கள், சட்டத்தின்படி அந்தக் குழுவின் உறுப்பினர்கள் நியமிக்கப்படுவார்கள் எனத் தெரிவித்தார்.

இதற்கு தொண்டுநிறுவனம் சார்பிலும், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தவருமான மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் கடும் எதிர்ப்புத் தெரிவித்தார். அவர் வாதிடுகையில், கடந்த 2017-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் உச்ச நீதிமன்றம் லோக்பால் குறித்த தீர்ப்பளித்தும் இன்னும் அதற்கான அமைப்பை அமைக்காமல் அரசு தாமதித்து வருகிறது. இந்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டு 5 ஆண்டுகள் ஆகிறது.

நீதிமன்ற அவமதிப்பின் கீழ் நடவடிக்கை எடுத்து, லோக்பால் நீதிபதியைத் தேர்வு செய்யும் தேர்வுக்குழு உறுப்பினர்களை நீதிமன்றமே தேர்வு செய்ய வேண்டும். அதற்கான அதிகாரம் அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 142 வழங்கி இருக்கிறது. மத்திய அரசு இந்த விவகாரத்தில் செயல்படுவதுபோல், நடிக்கிறது என்று வாதிட்டார்.

அதன்பின் நீதிபதிகள் பானுமதி, கோகாய், நவின் சின்ஹா ஆகியோர் சிறிது நிமிடங்கள் ஆலோசனை நடத்தினார்கள். அதைத்தொடர்ந்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், " லோக்பால் நீதிபதியைத் தேர்வு செய்யும் தேர்வுக்குழு,  உறுப்பினர்களைத் தேர்வு செய்யும் விவகாரத்தில் மத்திய அரசின் செயல்பாடு எங்களுக்கு முழுமையாக மனநிறைவை அளிக்கவில்லை.

அடுத்த 4 வாரங்களுக்குள் நீதிபதியை நியமிக்க என்னவிதமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன உள்ளிட்ட அனைத்து விதமான விவரங்களுடன், எங்களுக்கு 2-வது பிரமாணப்பத்திரத்தை தாக்கல் செய்ய வேண்டும்" என உத்தரவிட்டனர்.

நீதிமன்றத்துக்கு வெளியே மத்திய அட்டர்னி ஜெனரல் வேணுகோபால் கூறுகையில், லோக்பால் நீதிபதியைத் தேர்வு செய்யும் தேர்வுக்குழு உறுப்பினர்களைத் தேர்வு செய்ய அதிக காலம் செலவாகும் எனத் தெரிவித்தார்.

லோக்பால் நீதிபதியை தேர்வு செய்யும் உறுப்பினர் குழுவை தேர்வு செய்யும் கமிட்டியில் பிரதமர் மோடி, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, மக்களவை சபாநாயகர், எதிர்க்கட்சி அல்லது எதிர்க்கட்சியில் மிகப்பெரிய கட்சி, சட்டத்துறையில் நிபுணத்துவம் பெற்றவர்கள் இடம் பெற்றிருப்பார்கள். இதில் மூத்த வழக்கறிஞரும் முன்னாள் அட்டர்னி ஜெனரல் முகுல் ரோகத்கி சட்டநிபுணராக நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x