Published : 24 Jul 2018 07:55 AM
Last Updated : 24 Jul 2018 07:55 AM
மத்திய பிரதேசத்தில் வாட்ஸ் அப்பில் வந்த ஒரு சர்ச்சைக்குரிய தகவலைப் பகிர்ந்த நிர்வாகி (அட்மின்) வெளியேறிய நிலை யில், முன்கூட்டியே தேர்வு செய்யப்பட்ட முறைப்படி (டிபால்ட்) நிர்வாகியான கல்லூரி மாணவர் கடந்த 5 மாதங்களாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
ராஜ்கர் மாவட்டம் டலென் நகரைச் சேர்ந்த ஜுனைத் கான் (21) பிஎஸ்ஸி படித்து வருகிறார். இர்பான் என்பவர் நிர்வாகியாக இருந்த வாட்ஸ் அப் குழுவில் ஜுனைத் கானும் இருந்துள்ளார். இந்நிலையில், இர்பான் சர்ச்சைக் குரிய ஒரு தகவலை பகிர்ந்துள் ளார். அதன்பிறகு அவர் குழுவி லிருந்து வெளியேற, முன்கூட்டியே தேர்வு செய்யப்பட்ட முறைப்படி (டிபால்ட்) வேறு ஒருவர் நிர்வாகி யானார். அவரும் வெளியேற, இதே முறையில் ஜுனைத் கான் நிர்வாகியாகி உள்ளார்.
இந்நிலையில் அந்த சர்ச்சைக் குரிய தகவலைப் பகிர்ந்தது தொடர்பாக டலென் காவல் நிலையத்தில் உள்ளூர் மக்கள் புகார் செய்துள்ளனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீஸார், விசாரணை நடத்தினர். பின்னர் தகவல் தொழில்நுட்ப சட்டம் மற்றும் இந்திய தண்டனை சட்டத்தின் 124ஏ (தேச துரோகம்) பிரிவின் கீழ், அப்போது நிர்வாகியாக இருந்த ஜுனைத் கானை கடந்த பிப்ரவரி 14-ம் தேதி கைது செய்துள்ளனர்.
இதகுறித்து ஜுனைத் கானின் உறவினர் பருக் கான் கூறும்போது, “சர்ச்சைக்குரிய தகவல் பகிரப்பட்டபோது ஜுனைத் நிர்வாகியாக இல்லை என்ற வாதத்தை போலீஸார் ஏற்க மறுக்கின்றனர். இதுகுறித்து முதல்வருக்கு புகார் அனுப்பியும் நடவடிக்கை இல்லை. கடந்த 5 மாதங்களாக சிறையில் இருக்கும் ஜீனைத் கான் மீது, தேச துரோக பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதால் ஜாமீன் கிடைக்கவில்லை. இதனால் அவரால் தேர்வு எழுத முடியவில்லை” என்றார்.
இதுகுறித்து போலீஸ் உயர் அதிகாரி கூறும்போது, “புகாரை பெற்றபோது ஜூனைத் கான் நிர்வாகியாக இருந்ததால் அவரை கைது செய்தோம். ஆனால் அப்போது அவரது உறவினர்கள் இந்தத் தகவலை கூறவில்லை. இப்போது இந்த விவகாரம் நீதிமன்றத்திடம் உள்ளதால் எங்களால் ஒன்றும் செய்ய முடியாது. உரிய ஆதாரம் இருந்தால் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யலாம்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT