Last Updated : 21 Jul, 2018 02:55 PM

 

Published : 21 Jul 2018 02:55 PM
Last Updated : 21 Jul 2018 02:55 PM

120 பெண்களைப் பலாத்காரம் செய்து வீடியோ எடுத்து மிரட்டிய போலிச் சாமியார் கைது : ஹரியாணாவில் பயங்கரம்

ஹரியாணா மாநிலம், பதேஹேபாத் மாவட்டத்தில், போலிச் சாமியார் ஒருவர் 120 பெண்களைப் பலாத்காரம் செய்து வீடியோ எடுத்து மிரட்டி வந்த விவகாரம் வெளியே கசிந்ததால், அவரை போலீஸார் நேற்று கைது செய்தனர்.

பதேஹாபாத் மாவட்டம், தொஹானா பகுதியில் பாபா பாலக்நாத் கோயில் உள்ளது. இந்தக் கோயிலில் தலைமை அர்ச்சகராகவும், ஆன்மிக குரு என்று சொல்லிக்கொண்டு வலம் வந்தவர் பாபா அமர்புரி என்ற பில்லுராம்.

இவரிடம் ஆசி பெறுவதற்காக வரும் பெண்கள் பிரச்சினைகள் இருக்கிறது, உடல்நலப் பாதிப்பு இருக்கிறது என்று கூறும்போது அவர்களுக்குச் சிறப்பு பூஜைகள் செய்கிறேன் என்று கூறி அவர்களைப் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அதை வீடியோ எடுத்துவைத்து மிரட்டியும் வந்துள்ளார். இதில் பாதிக்கப்பட்ட இரு பெண்கள் துணிச்சலாக போலீஸிடம் நேற்று புகார் அளித்தனர்.

இந்தப் புகாரைத் தொடர்ந்து, தொஹானா போலீஸார் பாபா அமர்புரியின் ஆசிரமத்துக்குள் நேற்று  அதிரடியாகப் புகுந்து சோதனையிட்டனர். அப்போது, ஆசிரமத்தில் இருந்து ஏராளமான சிடிக்களும், பென்டிரைவ், மற்றும் செல்போனும் கண்டுபிடிக்கப்பட்டன.

இந்த செல்போனையும், பென்டிரைவையும் போலீஸார் ஆய்வு செய்தபோது, அதில் 120-க்கும் மேற்பட்ட பெண்களைப் பலாத்காரம் செய்து, வீடியோ எடுத்து வைத்திருந்ததைக் கண்டு போலீஸார் அதிர்ச்சி அடைந்தனர். அதே போலீஸார் ஆய்வு செய்தபோது அனைத்து வீடியோக்களும் வித்தியாசமானது என்பதால், 120 பெண்கள் வரை பாபா அமர்புரி பலாத்காரம் செய்திருக்கலாம் என போலீஸார் கருதுகின்றனர்.

இதையடுத்து, பாபா ராம்புரி மீது ஐசிபி பிரிவு 376 (பலாத்காரம்), 202 (தவறாகச் சித்தரித்தல்) உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைதுசெய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இது குறித்து தொஹானா போலீஸின் விசாரணை அதிகாரி கூறுகையில், ''பாபா அமர்புரி மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறோம். அவரிடம் இருந்து கைப்பற்றப்பட்ட செல்போன், பென்டிரைவ்களில் 120 வெவ்வேறு பெண்களின் புகைப்படங்கள், வீடியோக்கள் இருக்கின்றன. இந்தப் பெண்களை பாபா அமர்புரி பலாத்காரம் செய்து மிரட்டி இருக்கிறார். இவரால் பாதிக்கப்பட்ட பெண்களில் 2 பேர் தாமாக முன்வந்து புகார் அளித்துள்ளனர். அவர்கள் சாட்சி சொல்லவும் முன்வந்துள்ளனர். பாபா அமர்புரியிடம் தொடர்ந்து விசாரணை நடத்தும் போது, என்னென்ன குற்றங்கள் செய்துள்ளார் என்பது வெளிவரும்’’ என்று தெரிவித்தனர்.

இதற்கிடையே கடந்த 2017-ம் ஆண்டு அக்டோபர் மாதம், தொஹானாவைச் சேர்ந்த ஒரு பெண்ணை இதுபோன்று வீடியோ எடுத்து மிரட்டியுள்ளார் பாபா அமர்புரி. அந்தப் பெண் போலீஸில் புகார் அளிக்கவே, பாபா அமர்புரி கைது செய்யப்பட்டார். அதன்பின் ஜாமீனில் விடுதலையானார் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x