Published : 21 Jul 2018 11:54 AM
Last Updated : 21 Jul 2018 11:54 AM

பசு மாட்டை கடத்திச் செல்ல முயன்றதாக கூறி இளைஞர் அடித்துக் கொலை: ராஜஸ்தானில் மீண்டும் அட்டூழியம்

ராஜஸ்தான் மாநிலம் அல்வார் அருகே பசு மாட்டை கடத்தி செல்ல வந்ததாகக் கூறி அக்பர் கான் (வயது 28) என்ற இளைஞரை ஒரு கும்பல் அடித்துக் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாடு முழுவதும் பசுக்களைப் பாதுகாக்கிறோம் என்ற பெயரில் ஒரு சிலர் சட்டத்தைக் கையில் எடுத்து அப்பாவிகளை தாக்கிக் கொலை செய்யும் சம்பவங்கள் பல மாநிலங்களில் நடந்தன. இதுபோன்ற கொடூரமான சம்பவங்களை தடுத்து நிறுத்த வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவுகள் பிறப்பித்தன. எனினும் இந்த தாக்குதல்கள் தொடர்கதையாகி வருகின்றன.

இந்நிலையில், ராஜஸ்தான் மாநிலம் அல்வார் அருகே உள்ள ராம்கர் என்ற கிராமத்தில் இரண்டு பசு மாடுகளுடன் வந்த இளைஞர்கள் இருவரை ஒரு கும்பல் வழிமறித்துள்ளது. பசு மாடுகளை கடத்திச் செல்வதாக கூறி, அந்த கிராமத்தைச் சேர்ந்த சிலர் உருட்டுகட்டை உள்ளிட்டவற்றால் இருவரையும் கடுமையாக தாக்கியுள்ளனர்.

இதில்  ஒருவர் அந்த கும்பலிடம் இருந்து தப்பியோடினார். இதையடுத்து மற்றொரு இளைஞரான அக்பர் கானை அந்த கும்பல் கடுமையாக  தாக்கியது. அக்பர் கான் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதுகுறித்த தகவல் அறிந்து விரைந்து வந்த போலீஸார் அக்பர் கானை மருத்துமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.  அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

கும்பல் தாக்கியதில் உயிரிழந்த அக்பர் கான் தனது சொந்த ஊரான ஹரியாணா மாநிலம் கொல்கன்வு கிராமத்தில் இருந்து அந்த பசு மாடுகளை ஏற்றி வந்துள்ளார். ராம்கரில் விற்பனை செய்வதற்காக அந்த மாடுகள் கொண்டு வரப்பட்டதாக தெரிகிறது.

ஆனால் அவர்கள் இருவரும் ராம்கரில் இருந்து பசு மாடுகளை கடத்திச் செல்வதாக கூறி இந்த தாக்குதல் நடந்துள்ளது முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ராஜஸ்தான் மாநிலம் ஆல்வாரில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இதேபோன்று பசு கடத்தல் என்ற பெயரில் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் நடந்தது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x