Published : 21 Jul 2018 10:43 AM
Last Updated : 21 Jul 2018 10:43 AM

நம்பிக்கையில்லா தீர்மானம்: ஆதரவளித்த கட்சிகளுக்கு பிரதமர் மோடி நன்றி

மக்களவையில் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானத்தை தோற்கடித்து மத்திய அரசுக்கு ஆதரவளித்த அனைத்து கட்சிகளுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என பிரதமர் மோடி கூறியுள்ளார்.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த 18-ம் தேதி தொடங்கியது. முதல் நாளில் மத்திய அரசுக்கு எதிராக தெலுங்கு தேசம் எம்.பி ஸ்ரீநிவாஸ் நம்பிக்கை யில்லாத் தீர்மானம் கொண்டு வந்தார். இதேபோல காங்கிரஸ் சார்பிலும் நோட்டீஸ் அளிக்கப் பட்டது. இதைத் தொடர்ந்து மக்களவையில் நேற்று நம்பிக்கையில்லா தீர்மானம் மீது விவாதம் நடைபெற்றது.

தீர்மானத்தின் மீது பல்வேறு கட்சித் தலைவர்களும் பேசியதை தொடர்ந்து இறுதியில் இரவு 9.15 மணி அளவில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். அப்போது, எதிர்க்கட்சிக்கு அதிகார பசி ஏற்பட்டுள்ளது என்று அவர் கடுமையாக விமர்சித்தார். சுமார் 90 நிமிடங்கள் அவர் உரையாற்றினார்.

பின்னர், சுமார் 12 மணி நேர விவாதத்துக்குப் பிறகு வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இறுதியில் அரசுக்கு ஆதரவாக 325 வாக்குகள் கிடைத்தன. அரசுக்கு எதிராக 126 வாக்குகள் மட்டுமே கிடைத்த தால் தீர்மானம் தோல்வி அடைந்தது.

மக்களவையில் மத்திய அரசுக்கு ஆதரவாக வாக்களித்த அனைத்து கட்சிகளுக்கும் பிரதமர் மோடி நன்றி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தல் கூறுகையில் “மக்களவையில் மட்டுமின்றி, நாட்டின் 125 கோடி மக்களின் நம்பிக்கையையும் தேசிய ஜனநாயக கூட்டணி பெற்றிருக்கிறது. நம்பிக்கை வாக்கெடுப்பில் எங்களுக்கு ஆதரவு அளித்த அனைத்து கட்சிகளுக்கும் நன்றி. புதிய இந்தியாவை உருவாக்கவும், இளைஞர்களின் கனவை நனவாக்கவும் எங்கள் முயற்சி தொடரும். ஜெய் ஹிந்த்” என கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x