Published : 20 Jul 2018 07:20 PM
Last Updated : 20 Jul 2018 07:20 PM
மக்களவையில் நம்பிக்கையில்லாத் தீர்மான விவாதத்தில் மத்திய அரசை ஆதரித்து மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசினார். இதில் அவர், 1984-ல் நடைபெற்ற சீக்கியர் படுகொலை நாட்டில் கும்பலாக அடித்துக் கொல்லப்பட்ட ஒரே பெரிய சம்பவம் எனக் குறிப்பிட்டார்.
பாஜக தலைமையில் ஆளும் மத்திய அரசு மீது அடித்துக் கொல்லப்படும் சம்பவங்கள் அதிகமாகி விட்டதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து புகார் கூறி வருகின்றனர். இதற்கு பதில் அளிக்கும் வகையில் இன்று நம்பிக்கையில்லா தீர்மானத்தை எதிர்த்துப் பேசிய ராஜ்நாத், 1984-ல் நடைபெற்ற சீக்கியர் படுகொலை சம்பவத்தைக் குறிப்பிட்டார்.
இது குறித்து ராஜ்நாத் சிங் கூறும்போது, ''அடித்துக் கொல்லப்படுவது நாட்டில் நிறுத்தப்பட வேண்டும், ஆனால், நம் நாட்டிலேயே கும்பலாக அடித்துக் கொல்லப்பட்ட ஒரே பெரிய சம்பவம் என்பது 1984-ல் நடைபெற்ற சீக்கியர் படுகொலை. முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி தனது பாதுகாப்பாளர்களால் சுட்டுக்கொல்லப்பட்ட பின் நடைபெற்ற கலவரத்தில் சுமார் 3325 பேர் உயிரிழந்தனர்'' எனக் குறிப்பிட்டார்
மத்திய உள்துறை அமைச்சகத்தின் கணக்கெடுப்பின்படி சீக்கியர் படுகொலையில் இறந்தவர்கள் டெல்லியில் மட்டும் 2773 பேர் எனவும் ராஜ்நாத் சிங் நினைவுபடுத்தினார். 34 வருடங்களுக்கு முன் நடைபெற்ற இந்தப் படுகொலையில் இறந்த குடும்பங்களுக்கு நீதிபெற்றுத் தருவதற்காக சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருவதாகவும் அவர் தகவல் அளித்தார்.
சீக்கியர் படுகொலை மீது புதிதாக விசாரணை கமிஷன் அமைப்பதாக டெல்லி மாநில சட்டப்பேரவை தேர்தலின் போது ஆம் ஆத்மியின் தேசிய அமைப்பாளரான அர்விந்த் கேஜ்ரிவாலும் வாக்குறுதி அளித்திருந்தது நினைவுகூரத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT