Published : 20 Jul 2018 06:13 PM
Last Updated : 20 Jul 2018 06:13 PM
ஏழைகளின் உணவுப் பாதுகாப்பிற்கு உணவுப் பொருட்களை சேமிப்பது அவசியம் என மத்திய வணிகம் மற்றும் தொழில்துறை இணை அமைச்சர் சி.ஆர்.சவுத்ரி தெரிவித்துள்ளார். அதிமுக உறுப்பினர் டி.ரத்தினவேலு மாநிலங்களவையில் எழுப்பிய கேள்விக்கு அளித்த பதிலில் அவர் இவ்வாறு பதிலளித்தார்.
இது தொடர்பாக இணை அமைச்சர் சி.ஆர்.சவுத்ரி மாநிலங்களவையில் கூறியதாவது:
''உணவுப் பொருட்களை சேமித்து வைப்பது குறித்த உலக வர்த்தக நிறுவனத்தின் விதிகள் குறித்து நாங்கள் விவாதித்தோம். ஆனால் வளர்ச்சியடைந்த நாடுகள், உணவுப்பொருட்களை சேமித்து வைப்பதால் அவை சர்வதேச சந்தையில் விலை உயர்வுக்கு வழிவகுக்கும் என்று கருதுகின்றன.
ஆனால் வளர்ந்து வரும் நாடுகள், வறிய மக்களுக்கு உணவுப் பாதுகாப்பு தேவை என்றால் உணவுப் பொருட்களை சேமித்து வைப்பது அவசியம் என்று வாதாடின. உணவுப் பொருட்களை சேமித்துவைத்து பொது விநியோக அமைப்பு மூலம் ஏழை மக்களுக்கு வழங்கவேண்டும் என்று வளர்ந்து வரும் நாடுகள் கருதுகின்றன. பொது விநியோக முறை சர்வதேச சந்தையைப் பாதிக்கும் என்று வளர்ச்சியடைந்த நாடுகள் கருதுகின்றன.
சமீபத்தில் பியனஸ் ஏர்ரசில் 11-வது அமைச்சரவை மட்டத்திலான கூட்டம் நடைபெற்றது. அங்கு பொது விநியோக முறை அவசியம் என்று நாம் வாதாடியுள்ளோம். இந்தியாவில் ஐந்து கோடி மக்களுக்கும் அதிகமானோர் வறுமைக் கோட்டிற்கு கீழே வாழ்கின்றனர். நாட்டில் 81 கோடி மக்களுக்கு மானிய விலையில் உணவுப்பொருட்கள் வழங்குகிறோம் என்று இந்தியா கூறியது.
இது தொடர்பான ஒரு முறைசாரா சந்திப்பு புதுடெல்லியில் மார்ச் மாதம் 19, 20 தேதிகளில் நடைபெற்றது. 53 நாடுகள் இதில் பங்குபெற்றன. உணவுப் பொருட்களை சேமித்து வைப்பது அவசியம் என்று நாம் கேட்டுக்கொண்டிருக்கிறோம். அவ்வாறு சேமித்தால்தான் ஏழை மக்களுக்கு உணவுப் பாதுகாப்பு வழங்க முடியும் என்பது இந்தியாவின் நிலைப்பாடு ஆகும்.''
இவ்வாறு சி.ஆர்.சவுத்ரி கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT