Published : 20 Jul 2018 02:23 PM
Last Updated : 20 Jul 2018 02:23 PM
தமிழில் நீட் தேர்வு எழுதிய மாணவ, மாணவியர்களுக்கு, தவறான மொழி பெயர்ப்புக்காக 196 கருணை மதிப்பெண்கள் வழங்க வேண்டும் என்ற சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையின் உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் இன்று இடைக்கால தடை விதித்துள்ளது.
தமிழில் நீட் தேர்வு எழுதிய மாணவ, மாணவிகளுக்கு, தவறான மொழி பெயர்ப்புக்காக கருணை மதிப்பெண் வழங்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கட்சியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநலன் மனு தாக்கல் செய்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சி.டி.செல்வம், ஏ.எம்.பஷீர் அகமது ஆகியோர் அடங்கிய அமர்வு “ஆங்கிலத்திலிருந்து தமிழில் கேள்விகள் மொழிமாற்றம் செய்யப்பட்டபோது பல்வேறு தவறுகள் நிகழ்ந்துள்ளன. இது உறுதி செய்யப்பட்டுள்ளது. மொழிபெயர்ப்பு தவறாக இருந்த 49 கேள்விகளுக்கும் தலா 4 மதிப்பெண்கள் வீதம் 196 கருணை மதிப்பெண்கள் வழங்கப்பட வேண்டும். மதிப்பெண்கள் 2 வாரத்திற்குள் வழங்கப்பட்டு புதிய தரவரிசை பட்டியல் வெளியிடப்பட வேண்டும்” என சிபிஎஸ்இக்கு உத்தரவிட்டனர்.
இதை எதிர்த்த்து சிபிஎஸ்இ சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அதில், நீட் தேர்வு வினத்தாள்கள் அந்தந்த மாநில அரசுகளின் ஒத்துழைப்புடன், சம்பந்தபட்ட ஆசிரியர்கள் மூலமே மொழி பெயர்ப்பு செய்யப்பட்டது எனவும், இதனை சிபிஎஸ்இ சரிபார்க்க வாய்ப்பில்லை எனவும் தெரிவிக்கப்பட்டது.
இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று நீதிபதிகள் பாப்டே மற்றும் நாகேஸ்வர ராவ் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது, நீதிபதிகள் கூறுகையில் ‘‘மொழி பெயர்ப்பு தவறாக இருந்தால் ஆங்கில வினாத் தாளை ஒப்பிட்டு பார்த்து மாணவர்கள் பதில் எழுதி இருக்கலாம். கருணை மதிப்பெண்கள் வழங்குவது தமிழிலில் நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு பெரிய சலுகையாக மாறும் சூழல் ஏற்பட்டுள்ளது. மற்ற மாணவர்களுக்கு பாதிப்பாக முடியும். இந்த நிலைலையில் என்ன செய்யலாம் என்பதை சிபிஎஸ்இ முடிவு செய்ய வேண்டும்.
தமிழில் நீட் தேர்வு எழுதிய மாணவ, மாணவிகளுக்கு, தவறான மொழி பெயர்ப்புக்காக கருணை மதிப்பெண் வழங்க வேண்டும் என்ற சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்கப்படுகிறது. இதுகுறித்து சிபிஎஸ்இ பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும்’’ என நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர். இதைத்தொடர்ந்து வழக்கு விசாரணையை இரு வாரங்களுக்கு ஒத்தி வைத்து நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT