Last Updated : 20 Jul, 2018 01:03 PM

 

Published : 20 Jul 2018 01:03 PM
Last Updated : 20 Jul 2018 01:03 PM

பிரதமர் மோடியின் வெளிநாட்டு பயணச் செலவு ரூ.1,484 கோடி: 4 ஆண்டுகளில் 84 நாடுகளுக்குப் பயணம்

கடந்த 2014-ம் ஆண்டில் இருந்து பிரதமர் மோடி 84 நாடுகளுக்கு விமானத்தில் பயணம் செய்ததிலும், விமானத்தைப் பராமரித்ததிலும், ஹாட்லைன் வசதிகளை ஏற்படுத்திக்கொடுத்ததிலும் ஏறக்குறைய ரூ.ஆயிரத்து 484 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

பிரதமராக மோடி பதவி ஏற்றபின், அடிக்கடி வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்கிறார் மக்கள் பணியில் அக்கறை கொள்வதில்லை என்று எதிர்க்கட்சிகள் பலவாறு குற்றச்சாட்டு கூறிவந்தனர். வெளிநாட்டிலேயே பிரதமர் அலுவலகக்கிளைகளை திறக்கலாம் என்று சிவசேனா கட்சி கடுமையாக விமர்சித்து இருந்தது.

இந்நிலையில், கடந்த 2014-ம் ஆண்டில் இருந்து பிரதமர் மோடி வெளிநாடுகளுக்குச் சென்றது, பயணச் செலவு குறித்து நாடாளுமன்றத்தில் நேற்று அறிவிக்கப்பட்டது. மாநிலங்களவையில் மத்திய வெளியுறவுத்துறை இணைஅமைச்சர் வி.கே.சிங் இதை வெளியிட்டார். அவர் கூறியதாவது:

பிரதமர் மோடி வெளிநாடுகளுக்குப் பயணிக்கும் விமானத்தைப் பராமரிக்க கடந்த 4 ஆண்டுகளில் ரூ.ஆயிரத்து 88. 42 கோடி செலவாகியுள்ளது. 2014, ஜுன் 15 முதல் ஜுன் 10, 2018-ம் ஆண்டுவரை விமானத்தில் பயணம் செய்த வகையில் ரூ.387.26 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது. பிரதமர் மோடி மற்ற நாடுகளின் தலைவர்களுடன் பேசுவதற்காகத்தனிப்பட்ட முறையில் அமைக்கப்பட்ட ஹாட்லைனுக்காக ரூ.9.12 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த 2014-ம் ஆண்டு மே மாதம் முதல் பிரதமர் மோடி 84 நாடுகளுக்கு, 42 முறை பயணம் செய்துள்ளார். 2015-16-ம் ஆண்டில் அதிகபட்சமாக 24 நாடுகளுக்கும், 2017-18-ம் ஆண்டில் 19 நாடுகளுக்கும், 2016-17-ம் ஆண்டில் 18 நாடுகளுக்கும் பயணம் செய்துள்ளார்.

கடந்த 2014-ம்ஆண்டில் முதல் நாடாக பூட்டானுக்கு மோடி பயணித்தார். அதைத்தொடர்ந்து 2014-15-ம் ஆண்டில் 13 நாடுகளுக்கு மோடி பயணம் மேற்கொண்டார். 2018-ம் ஆண்டு தொடங்கியதில் இருந்து 10 நாடுகளுக்கு இதுவரை மோடி சுற்றுப்பயணம் சென்றுள்ளார். கடந்த மாதம் சீனா சென்று வந்தார்.

வெளிநாடுகளுக்கான விமானச் செலவு கடந்த 2014-15-ம் ஆண்டு ரூ.93.76 கோடி, 2015-16-ம் ஆண்டு ரூ.117 கோடியும் செலவு செய்யப்பட்டுள்ளது. 2016-17-ம் ஆண்டு ரூ.76.27 கோடியும், 2017-18-ம் ஆண்டு ரூ.99.32 கோடியும் செலவு செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு அமைச்சர் வி.கே.சிங் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x