Published : 20 Jul 2018 12:22 PM
Last Updated : 20 Jul 2018 12:22 PM
மக்களவையில் மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதம் இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. முதல்கட்சியாக ஒடிசாவைச் சேர்ந்த பிஜூ ஜனதாதளம் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தது. இன்று மாலை 6:00 மணியளவில் வாக்கெடுப்பு நடைபெறும் என சபாநாயகர் சுமித்ர மகாஜன் அறிவித்துள்ளார்.
நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தொடரில் ஆளும் பாஜக அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை தெலுங்கு தேசம் கட்சி கொண்டு வந்துள்ளது. தெலங்கு தேசம் கட்சி எம்.பி. கேசினேனி சீனிவாஸ் ஆளும் மோடி அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரக் கோரி நோட்டீஸ் அளித்தார்.
அதை மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் ஏற்றுக்கொள்வதாக அறிவித்தார். காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளன. இதன்படி, நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதம் மக்களவையில் காலை 11:00 மணியளவில் தொடங்கியது.
விவாதத்தை தொடங்கி வைத்து பேசிய தெலுங்குதேச எம்.பி ஜெயதேவ் கலா, ‘‘தெலுங்கானா பிரிக்கப்பட்டதில் பெரும்ப பின்னடைவை ஆந்திரா சந்தித்துள்ளது. தாயை கொன்று மகளை காப்பாற்ற காங்கிரஸ் முயலுவதாக அப்போது நரேந்திர மோடி கூறினார். தான் பதவிக்கு வந்த பின்பு, தாயையும் காப்பற்றபோவதாக கூறினார். எனினும் சொன்னதை அவர் செய்யவில்லை. தாயை காப்பாற்றவில்லை. ஆந்திராவுக்கு வழங்கப்பட வேண்டிய எந்த நிதியையும் அவர் வழங்கவில்லை’’ எனக் கூறினார்.
முன்னதாக விவாதம் தொடங்கும் முன்பு, எதிர்கட்சிகள் பேசுவதற்கு கூடுதல் நேரம் ஒதுக்க வேண்டும் என காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜூன கார்கே வேண்டுகோள் விடுத்தார். நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதம் ஆந்திர தொடர்பானது என்பதால் தங்களுக்கு தொடர்பு இல்லை எனக்கூறி ஒடிசாவைச் சேர்ந்த பிஜூ ஜனதாதள எம்.பி.,க்கள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். இன்று மாலை 6:00 மணியளவில் நம்பிக்கையில்லா தீர்மானம் மீது வாக்கெடுப்பு நடைபெறும் என சபாநாயகர் சுமித்திர மகாஜன் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT