Published : 20 Jul 2018 09:01 AM
Last Updated : 20 Jul 2018 09:01 AM

நம்பிக்கையில்லா தீர்மானத்தில் பங்கேற்ற பிறகு தெலுங்கு தேசம் எம்பி ராஜினாமா செய்ய முடிவு

மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்த பின்னர் தனது எம்பி பதவியை ராஜினாமா செய்யப் போவதாக அனந்தபூர் எம்பி ஜே.சி. திவாகர் ரெட்டி தெரிவித்துள்ளார்.

மத்திய அரசுக்கு எதிராக தெலுங்கு தேசம் கட்சி கொண்டு வந்துள்ள நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்து மக்களவையில் இன்று விவாதம் நடைபெற உள்ளது. இதில் பங்கேற்கப் போவதில்லை என தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்த மூத்த நிர்வாகியும், அனந்தபூர் தொகுதி எம்பியுமான ஜே.சி. திவாகர் ரெட்டி நேற்று திடீரென அறிவித்தார். இவருக்கும் இவரது தொகுதிக்குட்பட்ட சில எம்.எல்.ஏ.க்களுக்கும் இடையிலான கருத்து வேறுபாடே இதற்குக் காரணம் என கூறப்படுகிறது.

இதையடுத்து கட்சியின் மூத்த நிர்வாகிகள் அவரை சமாதானப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர். முதல்வர் சந்திரபாபு நாயுடுவும் அவருடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசி உள்ளார். இதை யடுத்து, நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களிக்க திவாகர் ரெட்டி ஒப்புக்கொண்டதாகக் கூறப்படுகிறது. ஆனால், வாக்கெடுப்புக்குப் பிறகு தனது எம்பி பதவியை ராஜினாமா செய்ய போவதாக திவாகர் ரெட்டி நேற்றிரவு செய்தியாளர்களிடம் கூறினார்.

கடந்த மக்களவைத் தேர்தலில் கர்னூல் மாவட்டம், நந்தியாலா தொகுதியில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் சார்பில்

போட்டியிட்டு வெற்றி பெற்றவர் எஸ்.பி.ஒய். ரெட்டி. அதன் பிறகு அவர் தெலுங்கு தேசம் கட்சியில் இணைந்தார். உடல்நலக்குறைவு காரணமாக நம்பிக்கையில்லா தீர்மானத்தில் பங்கேற்க இயலாது என ரெட்டி தெரிவித்துள்ளார். 

சந்திரபாபு நாயுடு கடிதம்

மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு ஆதரவு கோரி நாடு முழுவதும் உள்ள அனைத்து எம்பிகளுக்கும் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு கடிதம் எழுதி உள்ளார். அதில், “ஆந்திர மாநில பிரிவினையின்போது சிறப்பு அந்தஸ்து வழங்குவதாக கொடுத்த வாக்குறுதியை மத்திய அரசு நிறைவேற்றவில்லை. எனவே, நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு ஆதரவு அளிக்க வேண்டும்” எனக் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x