Last Updated : 17 Jul, 2018 08:06 PM

 

Published : 17 Jul 2018 08:06 PM
Last Updated : 17 Jul 2018 08:06 PM

மத்திய பாஜக அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம்: காங்கிரஸ் கட்சி முடிவு

 நாளை தொடங்கும் மழைக்காலக் கூட்டத்தொடரில் மத்தியில் ஆளும் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவர காங்கிரஸ் கட்சி முடிவு செய்துள்ளது. இதற்காக தன் கருத்தை ஒத்த கட்சிகளின் ஆதரவு கோரப்படும் என அந்தக் கட்சி அறிவித்துள்ளது

ஏற்கெனவே தெலங்கு தேசம் கட்சியும், பாஜக அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரும் முனைப்பில் தீவிரமாக செயல்பட்டு வருகிறது.

இதுதொடர்பாக, காங்கிரஸ் அல்லாத பிற கட்சிகளின் ஆதரவைக் கோரி வருகிறது தெலங்கு தேசம் கட்சி. சென்னையில் நேற்று திமுக எம்.பி. கனிமொழியைச் சந்தித்து நம்பிக்கையில்லாத் தீர்மானத்துக்கு திமுக எம்.பி.க்கள் ஆதரவு தர வேண்டும் என தெலங்கு தேசம் எம்.பி.க்கள் குழு கோரிக்கை விடுத்துச் சென்றனர். முன்னதாக சிவசேனா கட்சியைச் சந்தித்து தெலங்கு தேசம் கட்சி ஆதரவு கோரியது.

இந்நிலையில், நாளை தொடங்கும் மழைக்காலக் கூட்டத்தொடர் எந்தவிதமான கூச்சலும் குழப்பமும் இன்றி அமைதியாக, ஆக்கப்பூர்வமாக நடக்க வேண்டும் என்று பிரதமர் மோடி அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் வலியுறுத்தியுள்ளார். இதற்கிடையே தெலங்கு தேசம் கட்சியும், காங்கிரஸ் கட்சியும் தனித்தனியாக மக்களவைச் செயலாளரிடம் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவருவது குறித்து மனு நாளை அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இது குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறுகையில், ''வரும் மழைக்காலக் கூட்டத்தொடரில் காங்கிரஸ் கட்சி பல்வேறு முக்கிய விஷயங்களை விவாதிக்க இருக்கிறது. குறிப்பாகப் பெண்கள் பாதுகாப்பு, ஜம்மு காஷ்மீரில் ஆட்சியைத் தவறாகப் பயன்படுத்தியது, எஸ்சி, எஸ்டி சட்டத்தை நீர்த்துப்போகச் செய்யும் திருத்தம், விவசாயிகளுக்கு இட ஒதுக்கீட்டை ரத்து செய்யும் முயற்சி, ஆந்திர மாநிலத்துக்குச் சிறப்பு அந்தஸ்து உள்ளிட்ட விஷயங்களை விவாதிக்க இருக்கிறோம்.

மத்தியில் ஆளும் பாஜக அரசு, விதிமுறைகளையும், நெறிமுறைகளையும் புறந்தள்ளிவிட்டு, அரசின் நிறுவனங்களில் தங்களுக்கு தேவையானவர்களை நியமிக்கிறது, பெட்ரோல், டீசல் விலையையும் தொடர்ந்து உயர்த்தி வருகிறது. இது குறித்து அவையில் கேள்வி எழுப்புவோம்.

மோடியின் ஆட்சியில் வெளியுறவுக் கொள்கை மிகவும் கவலைக்கிடமாக இருக்கிறது, இதன் காரணமாக டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிவில் இருந்து வருகிறது.

பணமதிப்பு நீக்கம் காலத்தில் அகமதாபாத் மாவட்ட கூட்டுறவு வங்கியில் 5 நாட்களில் ரூ.750 கோடி டெபாசிட் செய்யப்பட்டது. இந்தக் கூட்டுறவு வங்கிகளின் இயக்குநர்களில் ஒருவராக பாஜக தலைவர் அமித் ஷா இருந்து வருகிறார். இது குறித்து விவாதிப்போம்'' என மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்தார்.

இதில் முக்கியமாக, கடந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் மத்திய அரசு மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவர மக்களவை சபாநாயகரிடம் நோட்டீஸ் அளித்தும் அதைச் சபாநாயகர் சுமித்ரா மகாஜன் எடுத்துக்கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x