Published : 17 Jul 2018 07:40 PM
Last Updated : 17 Jul 2018 07:40 PM
இருசக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணியால் பெட்ரோல் வாங்குவதற்கு வந்தால், நாளை முதல் பெட்ரோல் விற்பனை செய்யப்படாது என்று தெலங்கானா சிறைத்துறை அறிவித்துள்ளது.
தெலங்கானா சிறைத்துறை சார்பில் ஹைதராபாத் நகரில் மட்டும் 13 பெட்ரோல் விற்பனை நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த பெட்ரோல் விற்பனை நிலையங்களில் தண்டனைக் கைதிகள், முன்னாள் கைதிகள், முன்னாள் சிறைத்துறை அதிகாரிகள் ஊழியர்களாகப் பணியாற்றி வருகின்றனர்.
இந்த பெட்ரோல் நிலையங்களில் விற்கப்படும் பெட்ரோல், டீசல் எரிபொருட்கள் தரத்துக்கும், அளவுக்கும் புகழ்பெற்றதாகும்.
இந்நிலையில், அதிகரித்து வரும் விபத்துகளைக் குறைக்கும் வகையில், இருசக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணியாமல் பெட்ரோல் வாங்க வந்தால், அவர்களுக்கு பெட்ரோல் விற்பனை செய்யப்படாது என்ற முடிவைச் சிறைத்துறை எடுத்து, நாளை முதல் நடைமுறைப்படுத்த உள்ளது.
இது குறித்து சிறைத்துறை இயக்குநர் வி.கே.சிங் கூறுகையில், ''சிறைத்துறை சார்பில் நடத்தப்பட்டு வரும் 13 பெட்ரோல் விற்பனை நிலையங்கள், அடுத்து அமைக்கப்பட உள்ள 8 பெட்ரோல் விற்பனை நிலையங்களிலும் ஹெல்மெட் இல்லாமல் இருசக்கர வாகன ஓட்டிகள் பெட்ரோல் வாங்க வந்தால், அவர்களுக்கு பெட்ரோல் விற்பனை செய்யமாட்டோம் என அறிவித்துள்ளோம். இது நாளை முதல் நடைமுறைக்கு வருகிறது.
சிறைத்துறை சார்பில் நடத்தப்படும் பெட்ரோல் விற்பனை நிலையங்களில் அனைத்துப் பொருட்களும், தரமாகவும், அளவில் சரியாக கிடைக்கும் என்பதால் இருசக்கர வாகன ஓட்டிகள் விரும்பி வருகிறார்கள். அவ்வாறு வருபவர்கள் பெரும்பாலும் ஹெல்மெட்டே அணிவது இல்லை. இதனால், ஏற்படும் விபத்துகளில் சிக்கும் போது, உயிரிழப்புகள் ஏற்படுகிறது. இதைக் குறைக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விற்பனையைப் பெருக்கி வருவாயை அதிகப்படுத்துவது சிறைத்துறையின் நோக்கமல்ல. சமூகத்துக்கு நல்லவற்றையும், மாற்றத்தையும் கொண்டுவருவதுதான்'' என வி.கே.சிங் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT