Published : 17 Jul 2018 06:43 PM
Last Updated : 17 Jul 2018 06:43 PM
லோக்பால் தேர்வுக்குழு வரும் 19-ம் தேதி கூடி, லோக்பால் அமைப்புக்கான நீதிபதியைத் தேர்வு செய்யும் என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு இன்று தெரிவித்தது.
அரசு அதிகாரிகள், அமைச்சர்கள், அரசு ஊழியர்கள் ஊழல் செய்தால் விசாரிக்கும் அமைப்பாக மாநிலங்களில் லோக் ஆயுக்தாவும், மத்தியில் லோக்பால் அமைப்பும் உருவாக்க வேண்டும் என்று கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஆனால், பல்வேறு மாநிலங்களில் லோக் ஆயுக்தா மசோதா நிறைவேற்றப்படவில்லை, மத்திய அரசும் லோக்பாலுக்கு நியமிக்கப்படும் நீதிபதியைத் தேர்வு செய்யத் தேர்வுக்குழு அமைப்பதிலும் தாமதம் செய்து வந்தது.
இந்நிலையில், லோக்பால் அமைப்பை இன்னும் அமைக்காத மத்திய அரசுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொண்டு நிறுவனம் சார்பில் தொடரப்பட்டது. இந்த வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ரஞ்சன் கோகாய், ஆர். பாணுமதி, நவின் சின்ஹா ஆகியோர் முன் இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது மத்திய அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், வரும் 19-ம் தேதி லோக்பால் தேர்வுக்குழு கூடுகிறது. இந்தக் குழுவில் பிரதமர், உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி, மக்களவை சபாநாயகர், எதிர்க்கட்சித் தலைவர் அல்லது எதிர்க்கட்சியில் எது பெரிய கட்சியோ அந்தக் கட்சியின் தலைவர், சட்டத்துறையில் வல்லுநர் ஒருவர் இடம் பெற்றுள்ளனர். இவர் லோக்பால் அமைப்புக்குரிய நீதிபதியைத் தேர்வு செய்யும் குழுவை தேர்வு செய்வார்கள் எனத் தெரிவித்தார்.
இதையடுத்து, விரைவில் மாநிலங்களிலும் லோக் ஆயுக்தாவையும், லோக்பாலையும் விரைந்து அமைக்க வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கை வரும் 24-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
முன்னதாக, லோக்பால் தேர்வுக்குழுவில் சட்டத்துறையில் வல்லுநராக மூத்த வழக்கறிஞர் முகல் ரோகத்கியை கடந்த மே 15-ம் தேதி மத்திய அரசு நியமித்தது. கடந்த 2014-ம் ஆண்டு ஜுன் 19-ம்தேதி மத்திய அரசின் அட்டர்னி ஜெனரலாக நியமிக்கப்பட்ட இவர், கடந்த ஆண்டு ஜூன் மாதம் அந்தப் பதவியில் இருந்து விலகினார் என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT