Published : 17 Jul 2018 10:14 AM
Last Updated : 17 Jul 2018 10:14 AM

தங்களை சரிவர கவனிக்கவில்லை என்றால் மகனுக்கு எழுதி கொடுத்த சொத்துகளை பெற்றோர் திரும்ப பெற்றுக் கொள்ளலாம்: மும்பை உயர் நீதிமன்றம் தீர்ப்பு

தங்களை சரிவர கவனிக்கவில்லை என்றால், மகனுக்கு தானமாக எழுதிக் கொடுத்த சொத்துகளை பெற்றோர் திரும்பப் பெற்றுக் கொள்ளலாம் என மும்பை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

மும்பையின் அந்தேரி பகுதியை சேர்ந்த ஒரு முதியவரின் மனைவி கடந்த 2014-ம் ஆண்டு உயிரிழந்தார். இதையடுத்து அவர் 2-வது திருமணம் செய்ய விரும்பினார். அப்போது தனக்கு சொந்தமான குடியிருப்பின் 50 சதவீத உரிமையை தனது முதல் மனைவியின் மகனுக்கு அன்பளிப்பாக எழுதிக் கொடுத்தார். அதன் பிறகு மகனும் மருமகளும் அந்த முதியவரின் 2-வது மனைவியை அவமதிக்கத் தொடங்கினர்.

இதையடுத்து, அந்த முதியவர் தீர்ப்பாயத்தில் முறையீடு செய்தார். அவரது மனுவை விசாரித்த தீர்ப்பாயம், அந்த முதியவர் மகனுக்கு எழுதிக்கொடுத்த ஆவணத்தை ரத்து செய்தது. இதை எதிர்த்து மகன் சார்பில் மும்பை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இதை விசாரித்த நீதிபதிகள் ரஞ்சித் மோரி மற்றும் அனுஜா பிரபுதேசாய் அடங்கிய அமர்வு தீர்ப்பாயத்தின் உத்தரவை உறுதி செய்தது.

இதுகுறித்து நீதிபதிகள் கூறும்போது, “மகன் மற்றும் மருமகளின் கோரிக்கையை ஏற்று முதியவர் தனது வீட்டின் 50 சதவீத உரிமையை எழுதிக் கொடுத்துள்ளார். சட்டப்படி தனது தந்தை மற்றும் அவரது 2-வது மனைவியை பராமரிக்க வேண்டியது மகனின் கடமை. இதிலிருந்து தவறியதால் 2007-ம் ஆண்டின் சட்டப்படி, அன்பளிப்பாக எழுதிக் கொடுத்த சொத்தை திரும்பப் பெற முதியவருக்கு உரிமை உள்ளது. எனவே இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது” என்றனர்.

பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் நலன் மற்றும் பராமரிப்பு சட்டம் 2007-ல் இயற்றப்பட்டது. இதன்படி, பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்களிடமிருந்து அன்பளிப்பாகவோ, வேறு வழிகளிலோ சொத்துக்களின் உரிமையைப் பெற்றவர்கள், அந்த வயதானவர்களை அவர்கள் வாழ்நாள் முழுவதும் பராமரிக்க வேண்டும். இல்லையெனில் அன்பளிப்பாக வழங்கிய சொத்துக்களின் உரிமையை திரும்பப் பெற பெற்றோர் அல்லது மூத்த குடிமக்களுக்கு உரிமை உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x