Last Updated : 09 Jul, 2018 04:20 PM

 

Published : 09 Jul 2018 04:20 PM
Last Updated : 09 Jul 2018 04:20 PM

புதுடெல்லியின் தனியார் மருத்துவமனைகளில் ஏழைகளுக்கு இலவச சிகிச்சை: உச்ச நீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லியில் உள்ள தனியார் மருத்துவமனைகள் சமூகத்தில் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ள ஏழைகளுக்கு இலவச சிகிச்சை அளிக்கவேண்டுமென உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நீதிமன்ற உத்தரவில் தெரிவித்தள்ளதாவது:

புதுடெல்லியில் உள்ள பல தனியார் மருத்துவமனைகள் அரசாங்கத்தால் மானியம் பெற்று நடத்தப்படுகின்றன. இவை மிகவும் குறைந்த விலையிலான அரசு நிலங்களில் அமைந்துள்ளன. அரசால் பயன்பெற்று வரும் இம்மருத்துவமனைகள் 25 சதவீதம் புற நோயாளிகள் பிரிவு நோயாளிகளுக்கு கட்டணம் வசூலிக்காமல் இலவச சிகிச்சை அளிக்கப்பட வேண்டும். அதுமட்டுமின்றி 10 சதவீதம் உள்நோயாளிப் பிரிவு நோயாளிகளுக்கும் இலவச சிகிச்சை அளிக்கப்பட வேண்டும்.

உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள இந்த உத்தரவை தனியார் மருத்துவமனைகள் மீற முயன்றால் அவர்களது (நில) குத்தகைகள் ரத்து செய்யமுடியும்.

இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

உச்ச நீதிமன்றம் இந்த விவகாரத்தில் டெல்லி அரசாங்கத்தின் மாதாந்திர அறிக்கை கோரியுள்ளது. மாதாந்திர அறிக்கையில் ஒவ்வொரு மருத்துவமனையும் எத்தனை சதவீதம் ஏழை மக்களுக்கு இலவச சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது என்கிற பதிவு இடம்பெறும். அதில் இணைக்கப்படும் நோயாளிகள் தொடர்பான உரிய ஆவணங்களும் குறிப்பிட்ட மருத்துவமனையில் இலவச சிகிச்சைப் பிரிவில் செய்யப்பட்டனவா என்பதை தெளிவாக எடுத்துக்காட்டிவிடும்.

இதன்மூலம் ஏழைகளுக்கும் தனியார் மருத்துவமனைகளில் உயர் சிகிச்சை பெறும் வாய்ப்பு ஏற்படும் என்று கூறப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x