Published : 07 Jul 2018 08:32 AM
Last Updated : 07 Jul 2018 08:32 AM

காப்பகத்தில் இருந்த பச்சிளம் குழந்தையை விற்றதாக ஜார்க்கண்டில் கன்னியாஸ்திரி கைது: 13 சிறுமிகள் புதிய காப்பகத்துக்கு மாற்றம்

உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த தம்பதிக்கு தங்கள் காப்பகத்தில் பிறந்த குழந்தையை விற்றதாகக் கூறி அதில் பணிபுரிந்த கன்னியாஸ்திரி உட்பட 2 பேரை போலீஸார் கைது செய்தனர்.

ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நிர்மல் இருதய விடுதி என்ற பெயரில் ஆதரவற்றோருக்கான காப்பகம் ஒன்று இயங்கி வருகிறது. அன்னை தெரசா ஏற்படுத்திய ‘மிஷனரிஸ் ஆப் சாரிட்டி’ அமைப்பின் கீழ் இந்தக் காப்பகம் இயங்கி வருகிறது.

இந்தக் காப்பகம் குறித்து ராஞ்சி நகர குழந்தைகள் நலக் குழுத் தலைவரான ரூபா வர்மாவிடம் உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த தம்பதியினர் அண்மையில் புகார் அளித்தனர். அதில், நிர்மல் காப்பகத்திலிருந்து ரூ.1.21 லட்சம் செலுத்தி ஓர் ஆண் குழந்தையை பெற்றதாகவும், ஆனால் அந்தக் குழந்தையை அவர்கள் திரும்பி வாங்கிக் கொண்டதாகவும் தெரிவித்திருந்தனர்.

இதுகுறித்து குழந்தைகள் நலக் குழுவினர் விசாரணை மேற்கொண்டனர். அப்போது, அந்தக் காப்பகத்தில் தங்கியிருந்த ஆதரவற்ற பெண்ணுக்கு பிறந்த ஆண் குழந்தையை அவர்கள் பணம் பெற்றுக்கொண்டு உ.பி. தம்பதிக்கு விற்றது தெரியவந்தது. பின்னர், பேரம் பேசிய தொகை முழுமையாக வரவில்லை எனக் கூறி, அந்தக் குழந்தையை அவர்கள் திரும்பி எடுத்துக் கொண்டுள்ளனர்.

இதுகுறித்த புகாரின் பேரில், போலீஸார் வழக்குப் பதிவு செய்து, குழந்தையை விற்றதாக அக்காப்பகத்தில் பணியாற்றும் கன்னியாஸ்திரி கொன்சாலியா என்பவரையும், பெண் அலுவலர் அனீமா ஹிந்த்வார் என்பவரையும் போலீஸார் கைது செய்தனர்.

இந்நிலையில், புகாருக்குள்ளான நிர்மல் இருதய விடுதி காப்பகத்துக்கும் போலீஸார் சீல் வைத்தனர். மேலும், அந்த விடுதியில் தங்கியிருந்த 13 சிறுமிகளையும் புதிய காப்பகத்துக்கு போலீஸார் மாற்றியுள்ளனர். அதேபோல், ராஞ்சியில் இயங்கி வரும் மற்றொரு காப்பகத்தில் இருந்த 23 சிறுவர், சிறுமிகளும் புதிய காப்பகத்துக்கு மாற்றப்பட்டிருக்கின்றனர். - பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x