Last Updated : 06 Jul, 2018 08:25 AM

 

Published : 06 Jul 2018 08:25 AM
Last Updated : 06 Jul 2018 08:25 AM

ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தில் சேர்ந்த கேரள மாநில இளைஞர்களின் சொத்து பறிமுதல் செய்ய வேண்டும்: என்ஐஏ சிறப்பு நீதிமன்றம் உத்தரவு

ஐ.எஸ். தீவிரவாத அமைப்பில் இணைந்த கேரள இளைஞர்களின் சொத்துகளை பறிமுதல் செய்யுமாறு டெல்லி என்ஐஏ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கேரள மாநிலம் காசர்கோடு மாவட்டத்தைச் சேர்ந்த 14 இளைஞர்கள், கடந்த 2016-ம் ஆண்டு தங்கள் குடும்பத்தினருடன் இந்தியாவை விட்டு வெளியேறினர். பின்னர், அவர்கள் இராக்கில் செயல்படும் ஐஎஸ் தீவிரவாத அமைப்பில் இணைந்ததாக தகவல்கள் வெளியாகின. இது இந்தியாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த விவகாரம் தொடர்பாக தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ), கடந்த 2017-ம் ஆண்டு வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தியது. இதில், காசர்கோடு பகுதியைச் சேர்ந்த அப்துல் ரஷீத் அப்துல்லா என்பவர் ஐ.எஸ். அமைப்பில் இணைவதற்காக மற்றவர்களை மூளைச் சலவை செய்து அழைத்துச் சென்றது தெரியவந்தது.

இதையடுத்து, இவ்வழக்கின் முதல் குற்றவாளியாக அப்துல் ரஷீத் அப்துல்லாவை சேர்த்த என்ஐஏ அதிகாரிகள், அவருக்கு எதிராக டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்தனர். மேலும், இவ்வழக்கு தொடர்பாக இதுவரை 52 சாட்சிகளிடம் நீதிமன்றம் விசாரணை நடத்தியுள்ளது.

இவ்வழக்கு, டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ஐ.எஸ். அமைப்பில் இணைந்த கேரள இளைஞர்களின் வீடு உள்ளிட்ட சொத்துகளை பறிமுதல் செய்யுமாறு என்ஐஏ அதிகாரிகளுக்கு உத்தரவிட்டது. இதுதொடர்பான நோட்டீஸ்கள் சம்பந்தப்பட்ட நபர்களின் வீடுகளில் ஒட்டப்பட்டு வருவதாக என்ஐஏ அதிகாரிகள் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x