Last Updated : 06 Jul, 2018 07:41 AM

 

Published : 06 Jul 2018 07:41 AM
Last Updated : 06 Jul 2018 07:41 AM

காவிரியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணைகளின் நீர் இருப்பை கணக்கிட‌ அறிவியல் ரீதியான முறை தேவை: அறிக்கை தாக்கல் செய்ய 4 மாநிலங்களுக்கு ஒழுங்காற்று குழு உத்தரவு

காவிரியின் குறுக்கேயுள்ள அணைகளின் நீர் இருப்பை கணக்கிடும் அறிவியல் ரீதியான ஆய்வு முறை குறித்து அறிக்கை தரும்படி கர்நாடகா, தமிழகம் உள்ளிட்ட 4 மாநில அரசுகளுக்கு காவிரி நீர் ஒழுங்காற்று குழு உத்தரவிட்டுள்ளது.

உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை தொடர்ந்து காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி நீர் ஒழுங்காற்று குழு ஆகியவற்றை மத்திய அரசு அமைத்தது. கடந்த 2-ம் தேதி காவிரி மேலாண்மை ஆணையத்தின் முதல் கூட்டம் அதன் தலைவர் மசூத் உசேன் தலைமையில் நடந்த‌து. இந்நிலையில் காவிரி நீர் ஒழுங்காற்று குழுவின் முதல் கூட்டம் நேற்று டெல்லியில் மத்திய நீர்வளத் துறை ஆணையர் நவீன் குமார் தலைமையில் நடந்தது. இதில் தமிழக பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் செந்தில் குமார் உட்பட கர்நாடகா, கேரளா, புதுச்சேரி ஆகிய 4 மாநில தலைமை பொறியாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்த கூட்டத்துக்கு பிறகு காவிரி நீர் ஒழுங்காற்று குழு தலைவர் நவீன் குமார் கூறியதாவது:

உச்ச நீதிமன்ற உத்தரவின்படி காவிரி நதி நீரை சரியாக பங்கீட்டு கொள்வது குறித்தும் அணைகளின் நீர்மட்டத்தை கணக்கிட பின்பற்றப்படும் தொழில்நுட்ப முறை குறித்தும் ஆலோசித்தோம். குறிப்பாக காவிரியின் குறுக்கேயுள்ள அணைகளுக்கு மாதாந்திர வாரியாக வரும் நீர் வரத்து, நீர் இருப்பு, நீர் வெளியேற்றம் குறித்து விவாதித்தோம்.

அணைகளின் நீர் இருப்பை கணக்கிட ஒவ்வொரு மாநிலமும் வெவ்வேறான முறைகளை பின்பற்றுகிறது. எனவே 4 மாநிலங்களையும் நீர் இருப்பு, நீர் வரத்து, நீர் வெளியேற்றம், ஆவியாகும் நீர், மழை பொழிவின் அளவு உள்ளிட்ட விவரங்கள் குறித்து தனித்தனியாக வரும் 16-ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்யும்படி கேட்டிருக்கிறோம்.

இதில் துல்லியமான, அறிவியல் ரீதியான ஆய்வு முறை எது என கண்டறியப்படும். மாநிலங்கள் அறிவியல் ரீதியான ஆய்வு முறையை சுட்டிக்காட்டாத பட்சத்தில், மத்திய நீர்வளத் துறையின் சார்பில் சில முறைகள் முன்வைக்கப்படும். இதுகுறித்து விவாதித்து, சிறந்த அளவீட்டு முறை கண்டறியப்படும். அதன்படியே காவிரியின் குறுக்கேயுள்ள நீர் இருப்பு, நீர் வரத்து ஆகியவை கணக்கிடப்படும்.

எங்களது அடுத்த கூட்டம் வரும் 19-ம் தேதி நடைபெறும். அதில் 4 மாநில அரசுகளும் அளிக்கும் அறிக்கையின் மீது விவாதம் நடைபெற்று, துல்லியமான அறிவியல் ரீதியான ஆய்வு முறை குறித்து முடிவெடுக்கப்படும். நாங்கள் எடுக்கும் முடிவை, காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு வழிகாட்டுதலாக வழங்குவோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x