Last Updated : 30 Jun, 2018 07:15 PM

 

Published : 30 Jun 2018 07:15 PM
Last Updated : 30 Jun 2018 07:15 PM

முரண்டுபிடிக்கும் கர்நாடக அரசு: காவிரி ஆணையத்துக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர முடிவு

காவிரி மேலாண்மை ஆணையம், காவிரி நீர்ஒழுங்காற்று குழு அமைக்கப்பட்டதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர கர்நாடக அரச சார்பில் இன்று நடத்தப்பட்ட அனைத்துக்கட்சிக் கூட்சத்தில் முடிவு எடுக்கப்பட்டது.

காவிரி மேலாண்மை ஆணையம், ஒழுங்காற்றுக்குழுவில் தங்களிடம் ஆலோசிக்காமல் உறுப்பினர்களை மத்திய அரசு நியமித்ததை எதிர்த்து இந்த வழக்கு தொடரப்பட உள்ளது.

காவிரி நதிநீர் பங்கீடு வழக்கில் கடந்த பிப்ரவரி 16-ம் தேதி உச்ச நீதிமன்றம் இறுதித்தீர்ப்பு வழங்கியது. அதில் கர்நாடகத்துக்கு ஏற்கனவே இருந்த அளவில் 14 டிஎம்சி உயர்த்தி 284.75 டிஎம்சி நீரும், தமிழகத்துக்கு 419 டிஎம்சி என்ற அளவில் இருந்து 404.2 டிஎம்சியாகவும் குறைக்கப்பட்டது. கேரளாவுக்கு 30 டிஎம்சி, புதுச்சேரிக்கு 7 டிஎம்சி நீரில் மாற்றம் செய்யவில்லை.

அதன்படி பல்வேறு தாமதங்களுக்குப் பின், மத்திய அரசு இறுதித்தீர்ப்பை அரசிதழில் வெளியிட்டு, காவிரி மேம்பாட்டு ஆணையம், காவிரி நதிநீர் ஒழுங்காற்றுக்குழுவை அமைத்து.

இதில் காவிரி மேலாண்மை ஆணையத்துக்குத் தலைவராக மசூத் ஹூசைன் நியமிக்கப்பட்டுள்ளார். காவிரி நீர் ஒழுங்காற்றுக்குழுவுக்கு தலைவராக நீர்மேலாண்மைஅமைப்பின் தலைமை பொறியாளர் நவின் குமார் நியமிக்கப்பட்டார்.

தமிழகம்,கேரளம்,புதுச்சேரி ஆகிய மாநிலங்கள் தங்களின் உறுப்பினர்களை அறிவித்த நிலையில், கர்நாடகம் மட்டும் அறிவிக்கவில்லை. இருப்பினும், மத்திய அரசு தாமாகவே கர்நாடக மாநிலத்துக்கு உறுப்பினர்களை நியமித்தது.

காவிரி மேலாண்மை ஆணையத்துக்குத் தலைவர், உறுப்பினர்கள், பகுதி நேர உறுப்பினர்கள் 9 பேர் நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து, இந்த ஆணையத்தின் முதல் கூட்டம் வரும் ஜூலை 2-ம் தேதி டெல்லியில் நடைபெற உள்ளது.

இந்நிலையில், இந்தக் கூட்டத்தில் பங்கேற்பதா அல்லதுபுறக்கணிப்பதா, நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வதா என்பது குறித்து ஆலோசிக்கக் கர்நாடக அரசு சார்பில் அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு இன்று அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது.

இந்தக் கூட்டத்துக்கு முதல்வர் எச்.டி. குமாரசாமி தலைமை தாங்கினார். துணை முதல்வர் ஜி.பரமேஸ்வரா, எதிர்க்கட்சித் தலைவர் எடியூரப்பா, மத்திய அமைச்சர் சதானந்த கவுடா, அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், எம்பிக்கள், எம்.பி. வீரப்பமொய்லி உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த ஆலோசனைக் கூட்டம் 2 மணிநேரம் நடந்தது.

இந்தக் கூட்டத்துக்கு பின், மாநில நீர்வளத்துறை அமைச்சர் டி.கே.சிவக்குமார் நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

காவிரி மேலாண்மை ஆணையத்தில் கர்நாடக சார்பில் எங்கள் அதிகாரிகள் வரும் ஜூலை 2-ம் தேதி நடக்கும் கூட்டத்தில் பங்கேற்பார்கள். அங்கு எங்களின் கருத்துக்களையும், எண்ணங்களையும், மாநிலத்தில் விவசாயிகளையும் பாதுகாக்கும் விஷயத்தையும் அவர்கள் எடுத்துரைப்பார்கள்.

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரில் இந்த விவகாரத்தை ஒருமனதாக எழுப்ப அனைத்து எம்பிக்களும் ஒப்புக்கொண்டுள்ளனர்.

மேலும், எங்களைக் கலந்து ஆலோசிக்காமல் காவிரி மேலாண்மை ஆணையம், ஒழுங்காற்றுக்குழுவுக்கு உறுப்பினர்களை மத்தியஅரசு நியமித்ததை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் கர்நாடக அரசு சார்பில் வழக்கு தொடரப்படும்.

இதில் கர்நாடக சார்பில் மூத்த வழக்கறிஞர்கள் பாலி எஸ் நாரிமன், மோகன் கதார்கி வாதிடுவார்கள். இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தில் எப்படி அணுகுவது, எந்த அடிப்படையில் அணுகுவது குறித்து அவர்கள் முடிவு செய்வார்கள்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x