Published : 30 Jun 2018 05:21 PM
Last Updated : 30 Jun 2018 05:21 PM

ம.பி.யில் கொடூரம்: நிர்பயாவைப்போல் 8 வயது சிறுமிக்கு நேர்ந்த பாலியல் வன்கொடுமை; டாக்டர்கள் அதிர்ச்சி

கடந்த 2012-ம் ஆண்டு டெல்லியில் மருத்துவ மாணவி நிர்பயா பலாத்காரம் செய்யப்பட்டது போலவே, மத்தியப்பிரதேச மாநிலம் மான்டசூர் நகரில் 8 வயது சிறுமி பாலியல் பலாத்காரத்துக்கு ஆளாகி இருக்கிறாள் என்று மருத்துவர்கள் அதிர்ச்சி தெரிவிக்கின்றனர்.

மத்தியப் பிரதேச மாநிலம், மான்டசூர் நகரில் நகரில் கடந்த செவ்வாய்க்கிழமை 8 வயது சிறுமி பள்ளி முடிந்து தனது தாத்தாவுக்காகப் பள்ளி முன் காத்திருந்தார். அப்போது, அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் அந்தச் சிறுமியை கடத்திச் சென்று, பாலியல் பலாத்காரம் செய்தனர். அதன்பின் சிறுமியின் கழுத்தை அறுத்து ஒரு பஸ்ஸில் வீசிவிட்டுச் சென்றனர்.

மாலையில் சிறுமியைத் தேடி வந்த அவரின் தந்தை, உறவினர்கள் எங்குத் தேடியும் கிடைக்காததால், போலீஸில் புகார் செய்தார். போலீஸாரின் தீவிர தேடுதலுக்குப்பின் பஸ்கள் நிறுத்தப்படும் லட்சுமண் தார்வாஜா பகுதியில், ஒரு பஸ்ஸில் இருந்து சிறுமியின் அழுகுரல் கேட்டு அவர் மீட்கப்பட்டார்.

அதன்பின் அந்தச் சிறுமியை நகரில் உள்ள எம்யு மருத்துவமனையில் சேர்த்து தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

அந்தச் சிறுமிக்கு சிகிச்சை அளித்து வரும் மருத்துவர் பிரிஜேஸ் லஹோத்தி ஊடகங்களிடம் கூறுகையில், ‘‘கடந்த 2012-ம் ஆண்டு டெல்லி மருத்துவ மாணவி பலாத்காரம் செய்யப்பட்டது போன்று இந்தச் சிறுமி சிதைக்கப்பட்டு இருக்கிறாள். சிறுமியின் அந்தரங்க உறுப்புகளில் இரும்பு கம்பி அல்லது ஏதேனும் பிரம்பால் சிதைத்து, உடல்உறுப்புகளை சேதப்படுத்தி உள்ளனர்.

 ஏறக்குறைய 3 மணிநேரம் 2 அறுவை சிகிச்சை செய்து அந்த சிறுமியை காப்பாற்றியுள்ளோம். ஆனால், சிறுமி மிகவும் ஆபத்தான கட்டத்தைவிட்டு மீளவில்லை, மெல்ல மெல்லவே குணமாகி வருகிறார். பலாத்கார சம்பவத்தின் அதிர்ச்சியால் அந்தச் சிறுமி பேசக்கூட முடியவில்லை’’ எனத் தெரிவித்தார்.

இந்தப் பலாத்கார சம்பவம் தொடர்பாக நேற்றுமுன்தினம் இர்பான்(வயது20) என்ற இளைஞரைக் கைது செய்தனர். அவர் அளித்த தகவலின் அடிப்படையில், அவருடைய நண்பர் ஆசிப்(வயது24) என்பவரையும் கைது செய்தனர். இருவர் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டதற்கு மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் கடும் கண்டனம் தெரிவித்து, குற்றவாளிகளுக்கு அதிகபட்சமாகத் தூக்கு தண்டனை விதிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். மேலும், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும், குழந்தைகளைக் காக்க தேசமே ஒன்றுதிரள வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார்.

பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும், நடிகைகளும், நடிகர்களும் குழந்தைகள் பலாத்காரத்தில் ஈடுபட்டவர்களுக்கு அதிகபட்சமாகத் தூக்கு தண்டனை விதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x