Published : 30 Jun 2018 04:54 PM
Last Updated : 30 Jun 2018 04:54 PM

மாணவியை பலாத்காரம் செய்து வீடியோ எடுத்து மிரட்டிய சக மாணவர்கள்: பிறந்தநாள் விழாவில் நடந்த கொடூரம்

ஆந்திராவில் பொறியியல் கல்லூரி மாணவியை பலாத்காரம் செய்து, அதனை வீடியோ எடுத்து பணம் கேட்டு மிரட்டிய சக மாணவர் கைது செய்யப்பட்டார்.

ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டத்தில் உள்ள பிரபல பொறியியல் கல்லூரியில் படித்து வரும் மாணவர் ஒருவரின் பிறந்த நாளையொட்டி விருந்து நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தார். இதில் அந்த மாணவர் படிக்கும் கல்லூரியில் ஏராளமான மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர்.

அப்போது 22 வயதான ஜூனியர் மாணவி ஒருவரை சீனியர் மாணவர்கள் இருவர் குளிர்பானத்தில் மயக்க மருந்தை கலந்து அவரை பலாத்காரம் செய்துள்ளனர். இதனை வீடியோ எடுத்த அந்த மாணவர்கள் பின்னர் மாணவியை விடுதியில் கொண்டு போய் விட்டனர். பின்னர் அந்த வீடியோ காட்சியை காட்டி மாணவியை மிரட்டியுள்ளனர்.

இதுகுறித்து மாணவி கல்லூரி நிர்வாகத்திடம் புகார் அளித்துள்ளார். கல்லூரி முதல்வர் மாணவர்களை கண்டித்ததுடன் விஷயத்தை முடித்துக் கொண்டார். கல்லூரி நிர்வாகம் சார்பில் காவல்துறையில் புகார் அளிக்கவில்லை. கல்லூரி நிர்வாகம் கேட்டுக் கொண்டதால் மாணவியின் சார்பிலும் காவல்துறையில் புகார் அளிக்கவில்லை. நடந்த சம்பவங்களை மாணவியும் மறந்து விட்டு தனது படிப்பில் கவனம் செலுத்தினார்.

ஆனால் சம்பவம் நடந்து சில மாதங்களுக்கு பிறகு வேறு ஒரு மாணவரின் வடிவில் அந்த மாணவிக்கு பிரச்சினை உருவானது. பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட பழைய வீடியோ ஒன்றை, அதே கல்லூரியில் படிக்கும் வேறு ஒரு மாணவர், அந்த மாணவியிடம் காட்டி மிரட்டத் தொடங்கினார். 10 லட்சம் ரூபாய் பணம் கொடுக்காவிட்டால் சமூகவலைதளங்களில் வெளியிடப்போவதாக கூறி மிரட்டியுள்ளார்.

இதையடுத்து நடந்த சம்பவம் குறித்து பெற்றோரிடம் மாணவி கூறியுள்ளார். இதுதொடர்பான புகாரை அடுத்து அந்த மாணவனை போலீஸார் கைது செய்துள்ளனர். இதுமட்டுமின்றி மாணவியை ஏற்கெனவே பாலியல் பலாத்காரம் செய்த இரண்டு மாணவர்களையும் போலீஸார் தேடி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x