Published : 30 Jun 2018 12:51 PM
Last Updated : 30 Jun 2018 12:51 PM

மும்பையில் விபத்தில் சிக்கிய விமானம் ரூ.7 கோடிக்கு இன்சூரன்ஸ்: தகுதிச்சான்றிதழ் இல்லாமல் பறந்தது எப்படி?: விமானியின் கணவர் சந்தேகம்

மும்பையில் காட்கோபர் பகுதியில் கட்டிடத்தில் மோதி விபத்துக்குள்ளான விமானம், ரூ. 7 கோடிக்கு அந்த நிறுவனத்தால் இன்சூரன்ஸ் செய்யப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

விமானம் பறப்பதற்கு தகுதிச்சான்றிதழ் இல்லாத நிலையில், அந்த விமான பறந்தது எப்படி?, இன்சூரன்ஸ் தொகைக்காக இந்த விமானம் பறக்க அனுமதிக்கப்பட்டு விபத்தில் சிக்கவைக்கப்பட்டதா என்று விமானியின் உறவினர்கள் சந்தேகம் எழுப்பியுள்ளனர்.

மும்பையில் மையப்பகுதியான காட்கோபர் பகுதி, சர்வோதயா நகரில் நேற்றுமுன்தினம் பிற்பகல் 1.30 மணி அளவில் சிறிய ரக விமானம் ஒன்று கட்டிடத்தின் மீது மோதி விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் விமானத்தில் இருந்த பைலட், துணை பைலட் உள்ளிட்ட 4 பேரும், சாலையில் நடந்து ஒருவரும் பலியானார்கள்.

இந்த விபத்தில் சிக்கிய விமானம் கடந்த 2009-ம் ஆண்டு வரை உத்தரப்பிரதேசம் அரசின் வசம் இருந்து, அதன்பின் மும்பையில் உள்ள யு.வி. ஏவியேஷன் நிறுவனத்துக்கு விற்பனை செய்யப்பட்டு இருந்தது. ஆனால், கடந்த 10 ஆண்டுகளாக இந்த விமானம் பறப்பதற்கான எந்தவிதமான சான்றிதழையும் விமானப் போக்குவரத்து துறையிடம் இருந்து பெறவில்லை என்பது தெரியவந்துள்ளது.

இந்நிலையில், விமானத்தை இயக்கிய பெண் விமானி மரியா ஜுபேரி ஆயிரம் மணிநேரங்கள் விமானத்தை ஓட்டிய அனுபவம் மிக்கவர். மரியா ஜுபேரி விமான விபத்தில் இறந்ததற்கும், நிறுவனத்துக்கும் தொடர்பு இருப்பதாக அவரின் கணவர் பிரபாத் கதுரியா சந்தேகம் எழுப்பியுள்ளார்.

அவர் கூறுகையில், விமான நிறுவனமான யு.வி. ஏவியேஷன், மோசமான நிலையில் இருந்த விமானத்தை பழுதுநீக்கி, அது பறக்கதகுதியானதா என்பதைஆய்வு செய்யாமல், விமானத்தை பறக்க அனுமதித்துள்ளனர்.

விமானத்தில் பறப்பதற்கு முன் என்னிடம் என் மனைவி செல்போனில் பேசினார். அப்போது, வானிலை மோசமாக இருப்பதால், இப்போது விமானத்தை இயக்க முடியாது எனத் தெரிவித்துவிட்டேன். அதிலும் கிங் ஏர் சி90 போன்ற சிறிய ரக விமானத்தைத் தெளிவான வானிலையில்தான் இயக்க முடியும் என்று அதிகாரிகளிடம் தெரிவித்துவிட்டேன். விரைவில் வீட்டுக்குத் திரும்பிவிடுவேன் என்று தெரிவித்திருந்தார்.

மேலும், கேப்டன் ராஜ்புத்தும் இதே கருத்தை என் மனைவியிடம் தெரிவித்துள்ளார். இன்றுவானிலை சரியில்லை என்பதால், நாளை இயக்கலாம் என்று தெரிவித்துள்ளனர்.

அப்படி இருக்கும் போது, என் மனைவி எப்படி விமானத்தை இயக்கினார் அவரை விமானத்தை இயக்க வற்புறுத்தப்பட்டுள்ளாரா. தகுதியில்லாத விமானத்தை இயக்க யார் அனுமதி கொடுத்தது.

இந்த விமானம் 20 ஆண்டுகள் பழமையானது. ஏற்கனவே 2009-ம் ஆண்டு விபத்தில் சிக்கி இருக்கிறது. அதன்பின் பழுதுகள் பார்க்கப்பட்டு இயக்கப்பட்டு வந்துள்ளது. விமானத்தை இயக்குவதற்கு வானிலை சீராக இல்லை என்று என் மனைவி கூறிநிலையில் எப்படி விமானத்தை இயக்கினார். எனக்கும், எனது குடும்பத்துக்கும் பதில் வேண்டும். உண்மையில் என்ன நடந்தது என்பது குறித்து தெளிவுபடுத்த வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே விமான நிறுவனமான யு.வி.ஏவியேஷன் விமானத்தை ரூ.7 கோடிக்கு ஓரியன்டல் இன்சூரன்ஸ் நிறுவனத்திடம் காப்பீடு செய்துள்ளது. விமானம் விபத்தில் சிக்கிய 2 நாட்களில் காப்பீடுதுறை அதிகாரிகளை அனுப்பி மதிப்பீட்டைத் தொடங்கியுள்ளது.

இந்த விமானம் செய்யப்பட்டுள்ள காப்பீடு முறைப்படி செய்யப்பட்டுள்ளதா அல்லது விதிமுறைகளை மறீ இருக்கிறதா வானில் பறக்கவே தகுதிச்சான்றிதழ் இல்லாத நிலையில் எப்படி காப்பீடு செய்ய முடியும் என்ற கேள்விகளை காப்பீட்டுத்துறை அதிகாரிகள் எழுப்பியுள்ளனர்.

அதுமட்டுமல்லாமல், விமானப்போக்குவரத்து துறையின் விதிமுறைகளின்படி, விமானத்துக்கு மட்டும் காப்பீடு செய்யாமல், விமானம், பயணிகள், விமானி, சரக்குகள்அனைத்துக்கும் காப்பீடு செய்வது கட்டாயமாகும். ஆனால், இந்த நிறுவனம் முழுமையான காப்பீடு செய்துள்ளதா என்பது குறித்தும் அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.

12 இருக்கைகள் கொண்ட இந்த விமானத்துக்கு ரூ.7 கோடி இன்சூரன்ஸ் மிகக்குறைவாகும். மிகக்குறைந்த விலைக்கு வாங்கப்பட்டு 9 ஆண்டுகளாக நிறுத்தப்பட்டிருந்து இப்போது இயக்கப்பட்டு விபத்துக்குள்ளாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x