Published : 30 Jun 2018 08:52 AM
Last Updated : 30 Jun 2018 08:52 AM
காணாமல் போன சிறுவர்களைக் கண்டறிவதற்காக புதிய மொபைல் அப்ளிகேஷனை மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் சுரேஷ் பிரபு நேற்று அறிமுகம் செய்தார்.
டெல்லியில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்த மொபைல் அப்ளிகேஷன் சேவையை சுரேஷ் பிரபு அறிமுகம் செய்தார். ரீயுனைட் என்ற பெயரில் இந்த மொபைல் ஆப் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் சுரேஷ் பிரபு பேசும்போது, “காணாமல் போன குழந்தைகளையும், அவர்களது பெற்றோரையும் சேர்த்து வைப்பதற்கான முயற்சி இது. தொழில்நுட்பத்தின் உதவியுடன் சமூகத்தில் ஏற்படும் சவால்களை எதிர்கொள்ள இந்த மொபைல் அப்ளிகேஷன் அருமையான முறையில் உருவாக்கப்பட்டுள்ளது.
காணாமல் போன குழந்தைகளின் புகைப்படம், இதர விவரங்கள், பிறந்த தேதி, போலீஸ் நிலையத்தில் கொடுக்கப்பட்ட புகார் விவரம், குழந்தைகளின் அங்க அடையாளங்கள் போன்ற விவரங்களை இந்த மொபைல் ஆப்பில் பெற்றோர் பதிவு செய்யலாம். இந்த சேவையை அமேசான் நிறுவனத்தின் உதவியுடன் வழங்குகிறோம்” என்றார்.
ஆன்ட்ராய்ட் மற்றும் ஐஓஎஸ் வகை செல்போன்களில் இந்த அப்ளிகேஷனை டவுன்லோடு செய்துகொள்ளலாம். பச்பன் பச்சாவோ அந்தோலன் மற்றும் கேப்ஜெமினி ஆகிய அரசு சாரா நிறுவனங்கள் இந்த மொபைல் ஆப்-ஐ உருவாக்கியுள்ளன.
மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT