Published : 30 Jun 2018 08:20 AM
Last Updated : 30 Jun 2018 08:20 AM

நாட்டில் நேர்மையான சூழல் உருவாகி வருகிறது; ரயில் சலுகையை கைவிட்ட 42 லட்சம் மூத்த குடிமக்கள்: பிரதமர் நரேந்திர மோடி தகவல்

ரயில் பயணங்களுக்கான சலுகைகளை மூத்த குடிமக்கள் 42 லட்சம் பேர் கடந்த 9 மாதங்களில் கைவிட்டுள்ளனர் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் மூத்த குடிமக்கள் தேசிய மையத்துக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சி, சப்தர்ஜங் மருத்துவமனையில் நவீன வசதிகளுடன் கூடிய நோயாளிகள் பிரிவு திறப்பு நிகழ்ச்சி ஆகியவற்றில் பிரதமர் நரேந்திர மோடி நேற்று கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:

நாட்டில் நேர்மையான சூழல் உருவாகி வருகிறது. கோடிக்கணக்கான மக்கள் நாட்டின் வளர்ச்சிக்காக மானியங்களையும் சலுகைகளையும் விட்டுக் கொடுக்க முன்வருகின்றனர். கடந்த 9 மாதங்களில் மூத்த குடிமக்கள் 42 லட்சம் பேர் ரயில் பயணங்களுக்கான தங்கள் சலுகைகளை கைவிட்டுள்ளனர். எனது வேண்டுகோளை ஏற்று 1.25 கோடி குடும்பங்கள் காஸ் மானியத்தை விட்டுக் கொடுத்துள்ளனர்.

மாதம் ஒருமுறை கர்ப்பிணிகளுக்கு இலவச சிகிச்சை அளிக்க கேட்டுக் கொண்டேன். அதை ஏற்று ஆயிரக்கணக்கான டாக்டர்கள் முன்வந்து இதுவரை 1.25 கோடி கர்ப்பிணிகளுக்கு சிகிச்சை அளித்துள்ளனர். இவை எல்லாம் மத்திய அரசு மீது மக்கள் நம்பிக்கை அதிகரித்து வருவதை காட்டுகிறது. ஒவ்வொரு குடிமகனுக்கும் குறைந்த செலவில் உயர்தரமான சிகிச்சை கிடைக்கச் செய்வதே அரசின் லட்சியம். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x