Published : 30 Jun 2018 07:51 AM
Last Updated : 30 Jun 2018 07:51 AM

திருப்பதி ஏழுமலையான் கோயில் விவகாரம் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக் கோரி உயர் நீதிமன்றத்தில் பொதுநலன் வழக்கு

திருப்பதி ஏழுமலையான் கோயில் விவகாரம் குறித்து சிபிஐ விசாரணை நடத்த வலியுறுத்தி நேற்று ஹைதராபாத் உயர் நீதிமன்றத்தில் பொதுநலன் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

உலக பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயில் முன்னாள் பிரதான அர்ச்சகரான ரமண தீட்சிதரை, வயது வரம்பை காரணம் காட்டி, திருமலை திருப்பதி தேவஸ்தானம் பதவி நீக்கம் செய்தது. இதனைத் தொடர்ந்து அவர், திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை அடுக்கி வருகிறார்.

அரசர் காலத்தில் கோயிலுக்கு வழங் கப்பட்ட நகைகளில் உள்ள பல கோடி மதிப்புள்ள கற்கள் மாயமானது என்றும் ஏழுமலையான் கோயில் மடப்பள்ளியில் மராமத்து பணிகள் எனும் பெயரில் சுரங்கம் தோண்டப்பட்டது எனவும் ஆகம விதிகளை அதிகாரிகள் மீறுகின்றனர் என்றும் இதுகுறித்து கேள்வி கேட்டதற்காக தன்னை பணி நீக்கம் செய்ததாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

இதற்கு ரூ.100 கோடி மான நஷ்ட ஈடு கேட்டு திருப்பதி தேவஸ்தானம் ரமண தீட்சிதர் மீது வழக்கு தொடர்ந்துள்ளது. இந்தச் சூழலில், திருப்பதி ஏழுமலையானின் நகைகளின் பாதுகாப்பு குறித்து பக்தர்களிடையே சந்தேகம் கிளம்பியுள்ளது.

சந்திரபாபு நாயுடு கடிதம்

இந்த குற்றச்சாட்டுகளை திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் மறுத்துள்ளனர். மேலும், புதிய அறங்காவலர் குழுவினர் சில நாட்களுக்கு முன்பு, ஏழுமலையானின் அன்றாட நகைகளை ஆய்வு செய்து, அனைத்தும் சரியாக உள்ளன எனவும் அறிவித்தனர்.

இந்நிலையில், இதுகுறித்து நீதிபதி தலைமையில் விசாரணை நடத்தி பகிரங்கமாக அந்த அறிக்கையை வெளி யிட வேண்டுமென ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவும் ஹைதராபாத் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

இதனிடையே, பல்வேறு இந்து சமய அறக்கட்டளைகளும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் இது குறித்து சட்ட ரீதியான விசாரணை நடத்த வலியுறுத்தி வருகின்றன. ஆதலால், இப்பிரச்சனை நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது.

பொதுநலன் வழக்கு

இந்நிலையில், திருப்பதி ஏழுமலையான் தேவஸ்தானம் மீது முன்னாள் பிரதான அர்ச்சகரான ரமண தீட்சிதர் கூறிய குற்றச்சாட்டுகள் குறித்து சிபிஐ விசாரிக்க உத்தரவிடக்கோரி, அனில் கோஸ்வாமி எனும் பக்தர், நேற்று ஹைதராபாத் உயர் நீதிமன்றத்தில் பொதுநலன் வழக்கு தொடர்ந் துள்ளார்.

இதனை விசாரணைக்கு ஏற்ற நீதிமன்றம், வழக்கை வரும் ஜூலை 3-ம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளது.

தேவஸ்தான புதிய அறங்காவலர் குழு உறுப்பினராக விசாகப்பட்டினம் எம்எல்ஏ அனிதாவை ஆந்திர அரசு நியமித்ததும் அண்மையில் சர்ச்சை கிளம்பியது நினைவிருக்கலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x