Published : 30 Jun 2018 07:50 AM
Last Updated : 30 Jun 2018 07:50 AM
கர்நாடகாவில் மஜத - காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் தொடர்ந்து குழப்பம் நிலவி வருவதால் ஆட்சி நீடிக்குமா என சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து பாஜக மாநில தலைவர் எடியூரப்பா நேற்று அவசர ஆலோசனை நடத்தினார்.
கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் எந்த கட்சிக்கும் தனிப் பெரும்பான்மை கிடைக்காததால், மஜத மாநில தலைவர் குமாரசாமி, காங்கிரஸ் ஆதரவுடன் ஆட்சி அமைத்தார். இரு கட்சிகளுக்கு இடையே குழப்பம் ஏற்படுவதை தடுக்கும் வகையில் முன்னாள் முதல்வர் சித்தராமையா கூட்டணியின் ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப் பட்டார்.
இந்நிலையில், முதல்வர் குமாரசாமி புதியதாக பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு சித்தராமையா எதிர்ப்பு தெரிவித்தார். இதனை மீறி குமாரசாமி ராகுல் காந்தியின் ஒப்புதலை பெற்று ஜூலை முதல் வாரத்தில் பட்ஜெட் தாக்கல் செய்கிறார். இதனால் அதிருப்தி அடைந்த சித்தராமையா ஓய்வு எடுப்பதாகக் கூறி மங்களூருவுக்கு சென்றார். ஆனால் அங்கு தனது ஆதரவு அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் ஆகியோரை சந்தித்து ஆலோசனை நடத்தியது கர்நாடக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், முன்னாள் பிரதமரும், மஜத தேசிய தலைவருமான தேவகவுடா டெல்லி சென்று காங்கிரஸ் மேலிட தலைவர்களை சந்தித்துப் பேசினார். அப்போது கர்நாடக அரசுக்கு எதிராக சித்தராமையா உள்ளிட்ட காங்கிரஸார் பேசுவதை நிறுத்த வேண்டும் என வலியுறுத்தியதாக தெரிகிறது.
இதனிடையே, துணை முதல்வரும், கர்நாடக காங்கிரஸ் தலைவருமான பரமேஷ்வர், “காங்கிரஸ் தலைவர்கள் கட்சி கட்டுப்பாட்டை மீறி பேசக்கூடாது. ஊடகங்களுக்கு பேட்டி அளிப்பதை தவிர்க்க வேண்டும். குமாரசாமி தலைமையில் 5 ஆண்டுகள் ஆட்சி நடக்கும். கூட்டணி தொடரும் வகையில் இரு கட்சிகளுக்கும் இடையே பொது செயல் திட்டம் உருவாக்கப்படும். விரைவில் அதிருப்தி எம்எல்ஏக்களில் சிலருக்கு அமைச்சர் பதவி வழங்கப்படும். சித்தராமையாவுக்கு எதிராக யாரும் பேட்டி அளிக்கக் கூடாது” என தெரிவித்துள்ளார்.
மஜத - காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் குழப்பம் நீடிக்கும் நிலையில் பாஜக மாநில தலைவர் எடியூரப்பா அக்கட்சியின் தேசிய தலைவர் அமித் ஷாவை சமீபத்தில் சந்தித்து ஆலோசனை நடத்தினார். இந்நிலையில் பெங்களூருவில் நேற்று எடியூரப்பா தலைமையில் மூத்த தலைவர்களின் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் மத்திய அமைச்சர்கள் அனந்த குமார், சதானந்த கவுடா, மூத்த தலைவர் ஈஸ்வரப்பா, அசோக், ஷோபா கரந்தலாஜே உள்ளிட்டோர் பங்கேற்றனர். அப்போது கர்நாடகாவில் காங்கிரஸ்- மஜத இடையேயான மோதல், குமாரசாமி - சித்தராமையா இடையேயான பனிப் போர் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. அதிருப்தியில் உள்ள காங்கிரஸ், மஜத எம்எல்ஏக்களை பாஜகவுக்கு இழுப்பது, நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவருவது உள்ளிட்டவையும் ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT