Last Updated : 29 Jun, 2018 09:35 PM

 

Published : 29 Jun 2018 09:35 PM
Last Updated : 29 Jun 2018 09:35 PM

பணமதிப்புநீக்க ‘வேதனைக்கு’ பாஜக அரசு கண்டிப்பாக மன்னிப்பு கோர வேண்டும்: பினராயி விஜயன் வலியுறுத்தல்

சுவிஸ் வங்கிகளில் இந்தியர்களின் டெபாசிட் கடந்த ஆண்டு 50 சதவீதம் உயர்ந்துள்ளது குறித்து கருத்து தெரிவித்துள்ள கேரள முதல்வர் பினராயி விஜயன், பணமதிப்பு நீக்க வேதனைக்கு பாஜக அரசு மன்னிப்பு கோர வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

சுவிட்ஸர்லாந்து நாட்டில் உள்ள வங்கிகளில் இந்தியர்களின் டெபாசிட் கடந்த 2016-ம் ஆண்டைக் காட்டிலும், கடந்த 2017-ம் ஆண்டு 50 சதவீதம் உயர்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

இந்த அறிவிப்பால், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மத்திய அரசைக் கடுமையாக விமர்சித்து வருகின்றன. கறுப்புப்பணத்தை ஒழிப்போம் என்று கூறி ஆட்சிக்கு வந்த பாஜக அரசு, கறுப்புப்பணம் இல்லை என்கிறதா என்று ராகுல் காந்தி கேள்வி எழுப்பினார்.

இந்நிலையில், கேரள முதல்வர் பினராயி விஜயன் ட்விட்டரில் கூறுகையில், ஸ்விட்சர்லாந்து வங்கிகளில் இந்தியர்களின் டெபாசிட் கடந்த 2017-ம் ஆண்டில் அதற்குமுந்தைய ஆண்டைக் காட்டிலும் 50 சதவீதம் உயர்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் இருந்து மத்திய அரசு கொண்டுவந்த பணமதிப்பு நீக்க நடவடிக்கையின் அர்த்தம் புரிந்துவிட்டது, வெளிப்பட்டுவிட்டது. பணமதிப்பு நீக்க நவடிக்கையால், எந்தவிதமான பலனும் இல்லை, மக்களுக்கு வேதனையும், வலியும்தான் மிஞ்சியுள்ளது. பணமதிப்பு நீக்க நடவடிக்கையை நாட்டில் கொண்டு வந்ததற்காக பாஜக அரசு மன்னிப்பு கோர வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

மேலும், பல்கலைக்கழக மானியக்குழு(யுஜிசி) அமைப்பை கலைக்குவிட்டு, உயர் கல்வி ஆணையம் அமைக்க மத்தியஅரசு திட்டமிட்டுள்ளது. இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள கேரள முதல்வர் பினராயி விஜயன் தனதுபேஸ்புக் பக்கத்தில் கருத்துத் தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

பல்கலைக்கழக மானியக்குழுவை கலைத்துவிட்டு, தேசிய உயர்கல்வி ஆணையம் அமைக்கவேண்டும் என்ற மத்திய அரசின் முடிவு தன்னிச்சையானது. அந்தத் தேசிய உயர்கல்வி ஆணையத்தையும் மனித வள அமைச்சகத்தின் கீழ் கொண்டுவர முயல்கிறது, இது உயர்கல்வியில் பல்வேறு விளைவுகளை ஏற்படுத்தும்.

இதேபோன்ற ஒரு முயற்சி காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசில் கொண்டுவரப்பட்டது. இதன் நோக்கம் கல்வியை வியாபாரமாக்குவதுதான். ஆனால், எதிர்க்கட்சியான இடதுசாரிகளின் கடும் எதிர்ப்பால் அந்தத் திட்டத்தை காங்கிரஸ் அரசு கைவிட்டது, செயல்பாட்டுக்குக் கொண்டுவரவில்லை. ஆனால், அதை பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக்கூட்டணி அரசு நனவாக்க முயல்கிறது.

இந்நிலையில், கல்வியை வர்த்தகமயமாக்கும் நோக்கில் காங்கிரஸ் செயல்பட்டது, ஆனால், பாஜக அரசு தற்போது கல்வியை காவிமயமாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. பாஜகவுக்கு எதிரான மனப்பான்மை உள்ளவர்கள் அனைவரும், இந்த நேரத்தில் யுஜிசிக்கு ஆதரவாகக் குரல் எழுப்ப வேண்டும்

இவ்வாறு பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x