Published : 29 Jun 2018 04:52 PM
Last Updated : 29 Jun 2018 04:52 PM

ஒரு பாப்கானுக்கு 250 ரூபாயா? - தியேட்டர் மேலாளரை சரமாரியாக தாக்கிய ராஜ் தாக்கரே தொண்டர்கள்

புனே சினிமா தியேட்டரில் பாப்கான் 250 ரூபாய்க்கு விற்கப்பட்டதால் ஆத்திரமடைந்த மகாராஷ்டிர ராஜ் தாக்கரேயின் எம்என்எஸ் கட்சி தொண்டர்கள், மேலாளரை கடுமையாக தாக்கினர்.

மகாராஷ்டிர மாநில சினிமா தியேட்டர்களில் உணவு பண்டங்கள், குளிர்பானங்கள் விலை கூடுதலாக விற்கப்படுகிறது. இதை எதிர்த்து மும்பை உயர்நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன. இதை விசாரித்த உயர்நீதிமன்றம், உணவுப்பொருட்களின் விலையை குறைக்க சினிமா தியேட்டர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அண்மையில் உத்தரவிட்டது.

இந்நிலையில் புனே  ‘மால்’ ஒன்றில் இருந்த சினிமா தியேட்டரில் பாப்கான் 250 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதாக கூறப்படுகிறது. அங்கு நேற்று சினிமா பார்ப்பதற்காக வந்திருந்த ராஜ் தாக்ரேயின் எம்என்எஸ் எனப்படும் மகாராஷ்டிர நவநிர்மாண் சேனா கட்சியினர் பாப்கான் விற்பனை செய்தவர்களிடம் தகராறு செய்தனர்.

பின்னர் தியேட்டர் மேலாளரிடம் சென்று விளக்கம் கேட்டனர். மேலும், உயர் நீதிமன்ற உத்தரவை குறிப்பிட்டு 250 ரூபாயை தர முடியாது எனக் கூறினர். மராத்தி செய்தித்தாளை பார்த்த தியேட்டர் மேலாளர் தனக்கு மராத்தி வாசிக்க தெரியாது என்று கூறினார்.

பாப்கான் விலையை கேட்டு கொதித்து போயிருந்த எம்என்எஸ் தொண்டர்கள் இதைக் கேட்டு மேலும் கொதித்தனர். மராத்தி தெரியாமல் புனேயில்  பாப்கானுக்கு 250 ரூபாய் வசூலிப்பதா எனக் கூறி அவரை திட்டித் தீர்த்தனர். மேலும் சரமாரியாக தாக்கினர். அத்துடன் தியேட்டர் மீதும் தாக்குதல் நடத்தினர். எம்என்எஸ் தொண்டர்கள், அவரை தாக்கிய காட்சி தற்போது சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

இதுகுறித்து எம்என்எஸ் நிர்வாகி கிஷோர் ஷிண்டோ கூறுகையில் ‘‘5 ரூபாய் மதிப்புள்ள பாப்கானை 250 ரூபாய்க்கு விற்பனை செய்கின்றனர். மக்களிடம் அநியாயமாக வசூலிக்கின்றனர். மல்டி பிளக்ஸ் தியேட்டர்களில் தின்பண்டங்கள் விற்பனை தொடர்பாக ஏற்கெனவே உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஆனால் அதை மல்டி பிளக்ஸ் தியேட்டர் நிர்வாகங்கள் செயல்படுத்த மறுக்கின்றன. மாநில அரசு இந்த விவகாரத்தில் தலையிட வேண்டும். இல்லையெனில் மக்கள் வெளியில் இருந்து தின்பண்டங்களை கொண்டு வந்து தியேட்டர்களில் சாப்பிட அனுமதிக்க வேண்டும். நீதிமன்றம் உத்தரவிட்டும் செயல்படுத்தாததால் எங்கள் பாணியில் பதில் கொடுத்தோம்’’ எனக் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x