Last Updated : 29 Jun, 2018 12:55 PM

 

Published : 29 Jun 2018 12:55 PM
Last Updated : 29 Jun 2018 12:55 PM

ஓர் ஆண்டுக்குப்பின் மகிழ்ச்சி: பருவமழையால் சுத்தமான காற்றை சுவாசித்த டெல்லி மக்கள்

 டெல்லியில் கடந்த சில நாட்களாகப் பெய்த பருமழை காரணமாகக் காற்றில் கலந்திருந்த தூசுகள், அனைத்தும் அடித்துச்செல்லப்பட்டதால், ஏறக்குறைய ஓர் ஆண்டுக்குப் பின் டெல்லி மக்கள் சுத்தமான காற்றைச் சுவாசித்தனர்.

டெல்லியில் காற்றின் மாசு அளவு, மனிதன் சுவாசிப்பதற்கு ஏற்றத் தரத்தை ஒரு ஆண்டுக்குப் பின் இன்று பெற்றது என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

டெல்லியில் தென்மேற்கு பருவமழை இந்த வாரம் உச்சத்தை அடைந்தது. கடந்த திங்கள்கிழமை முதல் விட்டுவிட்டு நல்ல மழை பெய்து வருகிறது. ஆனால், நேற்றுமுன்தினம் முதல் கனமழை பெய்தது. இந்த மழையால், டெல்லியில் கடந்த ஒரு ஆண்டாகக் காற்றில் இருந்துவந்த மாசு படிப்படியாகக் குறைந்து மனிதன் சுவாசிக்க தகுதியான நிலைக்கு வந்துள்ளது.

டெல்லியில் காற்று தரக் குறியீட்டு அளவின்படி, இன்று காலையில் 83 புள்ளிகள் என்று தகுதியான, நிறைவான நிலையை எட்டியுள்ளது. புதன்,வியாழன் கிழமைகளில் பெய்த மழை காரணமாக காற்றின் மாசு குறைந்து மனிதன் சுவாசிக்க தகுதியான நிலைக்கு வந்துள்ளது எனப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

காற்று தரக் குறியீடு 0-50 புள்ளிகள் இருந்தால் சிறந்தது என்றும், 51-100 வரை இருந்தால் நிறைவு என்றும், 101-200 புள்ளிகள் வரை இருந்தால், மிதமான மாசு என்றும், 201-300 வரை மாசு இருந்தால், மோசம் என்றும், 301-400 வரை காற்றுமாசு இருந்தால், மிக மோசம், 401 முதல் 500வரை ஆபத்து ஆகும்.

ஆனால், கடந்த ஒரு ஆண்டாக டெல்லியில் காற்று மாசு 300 புள்ளிகளுக்கு மேல் இருந்தது. இதைக் கட்டப்படுத்த அவ்வப்போது போக்குவரத்து விதிகளை மாற்றி, ஒற்றை, இரட்டை எண் வாகனங்களை ஓட்டியதால், ஓரளவுக்குக் குறைந்து 300 புள்ளிகளுக்குக் கீழ் வந்தது.

ஆனால், கடந்த சில வாரங்களாகஅடித்த வெயில் தூசுபுயல் காரணமாக மீண்டும் காற்று மாசு 400க்கு மேல்அதிகரித்து அபாயகட்டத்தை எட்டியது. இந்த சூழலில் கடந்த சில நாட்களாகப் பெய்த மழையால் காற்றின் மாசு களையப்பட்டு சுத்தமான காற்று மக்களுக்குக் கிடைத்து வருகிறது.

இன்றைய காற்றின் மாசு அளவான  83 புள்ளிகளை டெல்லி மக்கள் ஒரு ஆண்டுக்குப் பின் பெறுகின்றனர். கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் காற்றில் மாசு 83 புள்ளிகள் இருந்தது. அதன்பின் காற்றின் மாசு அதிகரித்ததே தவிர குறையவில்லை. ஆனால், இன்று டெல்லியில் இதமான காற்று, குளிர்ச்சி, சுத்தமான காற்றால் மக்கள் முகத்தில் ஒருவிதமான மலர்ச்சயும், மகிழ்ச்சியும் தென்படுகிறது என்று மாசுக்கட்டுப்பாட்டு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

மத்தியஅரசின் காற்றுத்தரம் மற்றும் வானிலை மற்றும் ஆய்வு நிறுவனம்(எஸ்ஏஎப்ஏஆர்) நிறுவனத்தின் அறிவியல் வல்லுநர் குப்ரன் பீக் கூறுகையில், டெல்லியில் ஓர் ஆண்டுக்குப் பின் காற்றுமாசு 83 புள்ளிகளை எட்டியுள்ளது.அடுத்து வரும் நாட்களிலும் காற்றின் தரம் அதிகரிக்கும் என்று நம்புகிறோம். பருவமழை காற்றில் உள்ள நச்சுகளையும், தூசிகளையும் நீக்கி சுத்தமான காற்றை அளித்துள்ளது எனத் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x