Published : 29 Jun 2018 08:28 AM
Last Updated : 29 Jun 2018 08:28 AM
காஷ்மீர் பத்திரிகை ஆசிரியர் கொலைக்கான சதித் திட்டம் பாகிஸ்தானில் தீட்டப்பட்டுள்ளது. இந்த கொலையில் தொடர்புடைய 4 தீவிரவாதிகளின் புகைப்படங்களை போலீஸார் நேற்று வெளியிட்டனர்.
காஷ்மீரில் இருந்து வெளியாகும் ‘ரைசிங் காஷ்மீர்’ பத்திரிகையின் ஆசிரியர் ஷுஜாத் புகாரி கடந்த 14-ம் தேதி சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த கொலை சம்பவத்தில் காஷ்மீரின் ஸ்ரீநகரைச் சேர்ந்த சஜாத் குல் என்ற தீவிரவாதி மூளையாக செயல்பட்டுள்ளார். லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாத இயக்கத்தின் மூத்த தலைவரான அவர் தற்போது பாகிஸ்தானில் பதுங்கி வாழ்கிறார். அவரது தலைமையில் பாகிஸ்தான் மண்ணில் கொலைக்கான சதித் திட்டம் தீட்டப்பட்டுள்ளது.
சஜாத் குல்லின் உத்தரவின்பேரில் தீவிரவாதிகள் ஆசாத் அகமது மாலிக், முஷாபர் அகமது பட், நவீத் ஜாட் ஆகியோர் பத்திரிகை ஆசிரியர் ஷுஜாத் புகாரியை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுள்ளனர். 4 பேரின் புகைப்படங்களையும் போலீஸார் நேற்று வெளியிட்டனர். அவர்களைப் பிடிக்க தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்று போலீஸார் தெரிவித்துள்ளனர்.
போலீஸ் ஐஜிபி பானி கூறியதாவது: ஷுஜாத் புகாரிக்கு எதிராக சமூக வலைதளங்களில் தொடர்ந்து அவதூறு பரப்பப்பட்டுள்ளது. இந்த அவதூறு பதிவுகள் பாகிஸ்தானில் இருந்து பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. கொலைக்கு மூளையாக செயல்பட்ட சஜாத் குல் கடந்த 2017 மார்ச் மாதம் பாகிஸ்தானுக்கு தப்பிச் சென்றுள்ளார். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT