Last Updated : 29 Jun, 2018 08:27 AM

 

Published : 29 Jun 2018 08:27 AM
Last Updated : 29 Jun 2018 08:27 AM

பெண்களுக்கு ஆபத்தான நாடு அல்ல இந்தியா: ஆய்வு முடிவை நிராகரித்த சசிதரூர்

பெண்களுக்கு மிகவும் ஆபத்தான நாடு இந்தியா என்ற ஆய்வு முடிவை காங்கிரஸ் மூத்த தலைவர் சசிதரூர் நிராகரித்துள்ளார். இது மிகைப்படுத்தப்பட்ட கருத்து என அவர் கூறியுள்ளார்.

உலக அளவில் பெண்களுக்கு பாதுகாப்பற்ற நாடுகள் குறித்து தாம்சன் ராய்ட்டர்ஸ் அறக்கட்டளை சார்பில் ஆய்வு நடத்தப்பட்டது. இதில் உலகில் பெண்களுக்கு மிகவும் பாதுகாப்பற்ற 10 நாடுகள் பட்டியலில் இந்தியா முதலிடத்தில் உள்ளது.

இந்நிலையில் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் கருத்தரங்கு ஒன்றில் சசிதரூர் பேசும்போது, “இந்தியாவில் சமீபத்திய ஆண்டுகளில் பெண்களுக்கு எதிராக பல்வேறு விரும்பத்தகாத சம்பவங்கள் நடந்துள்ளன. இந்நிலையில் சமீபத்தில் ஆய்வு முடிவு ஒவ்வொரு இந்தியருக்கும் குறிப்பாக ஒவ்வொரு இந்திய ஆணுக்கும் தலைக்குனிவுதான். என்றாலும் உலகில் மிகவும் ஆபத்தான நாடு என்று கூறுவதை ஏற்க முடியவில்லை.

பெண்களுக்கு மிகவும் பாதுகாப்பான நாடாக இந்தியா விளங்குவதை உறுதி செய்வதற்காக, பாலின சமத்துவம் குறித்த விழிப்புணர்வு, பெண் கல்வி, தீவிர போலீஸ் ரோந்துப் பணி மற்றும் போலீஸ் படைகளில் பெண்களின் பங்களிப்பை அதிகரிப்பதற்கான குரல் ஒலித்து வருகிறது. பாகிஸ்தான், சவுதி அரேபியா, சிரியா, ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளை விட இந்தியா பெண்களுக்கு பாதுகாப்பான நாடகவே உள்ளது. பெண்கள் சுதந்திரமாக நடமாடுவது முதல் தொழில் புரிவது வரை பல்வேறு கட்டுப்பாடுகள் ஆப்கானிஸ்தான், சவுதி அரேபியாவில் உள்ளன. இதுபோன்ற கட்டுப்பாடுகள் இந்தியாவில் இல்லை” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x