Published : 29 Jun 2018 07:52 AM
Last Updated : 29 Jun 2018 07:52 AM

ஆந்திராவின் கர்னூல் மாவட்டத்தில் அதிர்ச்சி சம்பவம்: மகளை 1.5 லட்சம் ரூபாய்க்கு விற்ற தந்தை- மனைவி மற்றும் 2 மகள்களையும் அடமானம் வைக்க முயற்சி

ஆந்திர மாநிலம், கர்னூல் மாவட்டம், கொய்யலகுண்ட்லா பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் பசுபுலேடி. இவரது மனைவி வெங்கடம்மா. இவர்களுக்கு மது (15), மகேஸ்வரி (12), மோனிகா (10), மனீஷா (8) என்கிற 4 மகள்களும், சரண் (3) என்ற மகனும் உள்ளனர்.

மது அருந்தும் பழக்கம் உள்ள பசுபுலேடிக்கு, அந்தப் பகுதியில் அதிக கடன் ஏற்பட்டது. இதனால் வீட்டை விற்றுள்ளார். ஆயினும் கடன் தீரவில்லை. இதனிடையே கடன் கொடுத்தவர்கள் இவரை அதிகமாக நச்சரிக்க தொடங்கினர். இதனால், தனது மகள்களில் ஒருவரை அவர் சமீபத்தில் ரூ.1.5 லட்சத்திற்கு தனது நெருங்கிய உறவினருக்கு விற்றுள்ளார். அப்படியும் கடன் தீராததால், தனது மனைவி மற்றும் மேலும் 2 மகள்களையும் அடமானம் வைக்க முடிவு செய்தார்.

இதனை அறிந்த அவரது மனைவி வெங்கடம்மாள், நேற்று கர்னூல் தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இதுகுறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது, ரூ. 1.5 லட்சத்திற்கு விற்ற மகளை போலீஸார் மீட்டனர். மேலும், அடமானம் வைக்க ஒப்பந்தம் போட்ட பத்திரங்களையும் போலீஸார் பசுபுலேடியின் உறவினர்களிடமிருந்து மீட்டனர்.

இதனிடையே இது குறித்து தகவல் அறிந்த தாய்-சேய் நலத்துறை அதிகாரிகள், மகளிர் அமைப்பினர் ஆகியோர் வந்து வெங்கடம்மாவிடம் விசாரணை நடத்தினர்.

4 பெண்களும் மேஜர் ஆகும் வரை பாதுகாப்பாக தாய்-சேய் நலத்துறையின் விடுதியில் தங்குமாறு அறிவுறுத்தினர். இதற்கு வெங்கடம்மாவும் சம்மதம் தெரிவித்தார். அதன் பேரில், 4 பெண் பிள்ளைகளும் நேற்று முதல் கர்னூல் தாய்-சேய் நலத்துறை விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

மகளை விற்ற ஆட்டோ ஓட்டுனர் பசுபுலேடிக்கு போலீஸார் அறிவுரை வழங்கினர். கடன் கொடுத்தவர்களையும், பெண்ணை விலைக்கு வாங்கியவர்களையும் அழைத்து எச்சரித்தனர். இந்த சம்பவம் ஆந்திராவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x