Published : 29 Jun 2018 07:46 AM
Last Updated : 29 Jun 2018 07:46 AM

ஏழுமலையான் கோயில் பிரச்சினை குறித்து விசாரிக்க குழு: தலைமை நீதிபதிக்கு சந்திரபாபு நாயுடு கடிதம்

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் எழுந்துள்ள பிரச்சினைகளைத் தீர்க்க ஒரு கமிட்டியை அமைத்து விசாரணை நடத்த வேண்டுமென உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு முதல்வர் சந்திரபாபு நாயுடு கடிதம் எழுதியுள்ளார்.

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பெரும் சர்ச்சை நிலவி வருகிறது. பதவி நீக்கப்பட்ட பிரதான அர்ச்சகரான ரமண தீட்சிதர் கூறிய பல குற்றச்சாட்டுகள் புயலை கிளப்பி உள்ளன. ஏழுமலையானின் நகைகள் மாயம், ஆகம சாஸ்திரங்களுக்கு எதிராக அதிகாரிகளின் நடவடிக்கைகள், மடப்பள்ளியில் சுரங்கம் தோண்டுதல் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளை ரமண தீட்சிதர் கிளப்பி உள்ளார். இதனை தேவஸ்தானம் மறுத்துள்ளது.

இந்நிலையில், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, ஹைதராபாத் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு அனுப்பிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சில நகைகள் களவு போனதாகவும், காணாமல் போனதாகவும் சிலர் குற்றம் சாட்டி வருகின்றனர். அறங்காவலர் குழு, தேவஸ்தான அதிகாரிகள் ஏழுமலையானின் நகைகளை ஆய்வு செய்து, அனைத்தும் பாதுகாப்பாக இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

எனினும் இந்த விவகாரம் குறித்து ஹைதராபாத் உயர்நீதி மன்றம், ஒரு நீதிபதி தலைமையில் விசாரணை குழு அமைத்து விசாரணை நடத்த வேண்டும். அந்த குழுவின் அறிக்கையை பக்தர்கள், பொதுமக்களுக்கு தெரியும்படி பகிரங்கமாக வெளியிட வேண்டும்.

இவ்வாறு கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x