Last Updated : 25 Jun, 2018 02:53 PM

 

Published : 25 Jun 2018 02:53 PM
Last Updated : 25 Jun 2018 02:53 PM

18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் 27-ம் தேதி விசாரணை

 

அதிமுக எம்எல்ஏக்கள் 18 பேர் தகுதிநீக்கம் செய்யப்பட்ட வழக்கில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் இருமாறுபட்ட தீர்ப்பு வழங்கியத் தொடர்ந்து, வழக்கை உச்ச நீதிமன்றத்துக்கு மாற்றக் கோரி 18 எம்எல்ஏக்கள் தாக்கல் செய்த மனு வரும் 27-ம் தேதி விசாரணைக்கு வருகிறது.

உச்ச நீதிமன்றத்தில் விடுமுறைக்கால அமர்வு நீதிபதிகள் அருண் மிஸ்ரா, எஸ்.கே.கவுல் ஆகியோர் முன் இந்த வழக்கு நாளை மறுநாள் விசாரணைக்கு வருகிறது.

முதல்வர் எடப்பாடி பழனிசாமியை மாற்றக்கோரி  அதிமுகவின் 18 எம்எல்ஏக்கள் ஆளுநரிடம் மனு அளித்தனர். இந்த 18 எம்எல்ஏக்களையும் கட்சித் தாவல் தடை சட்டத்தின் கீழ் சபாநாயகர் தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டார். இதை எதிர்த்து 18 பேரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கின் தீர்ப்பை தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி சுந்தர் அடங்கிய அமர்வு வழங்கியது. சபாநாயகர் 18 எம்எல்ஏக்களை தகுதிநீக்கியது செல்லும் என்று அவர் அதிகாரத்தில் தலையிட முடியாது என்று தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜியும், எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் செல்லாது என நீதிபதி சுந்தரும் மாறுபட்ட தீர்ப்பு வழங்கினார்கள்.

இதனால் வழக்கில் 3-ஆவது நீதிபதிக்கு மாற்றப்பட்டு, நீதிபதி விமலாவை மூத்த நீதிபதி குலுவாடி ரமேஷ் நியமனம் செய்தார்.

இந்நிலையில் 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் 18 எம்.எல்.ஏ.க்கள் சார்பில் உச்சநீதிமன்றத்தில் புதிய மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. மனுதாரர் சார்பில் மூத்த வழக்கறிஞர் விகாஸ் சிங் ஆஜராகினார்.

அந்த மனுவில் எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் விசாரணை மேற்கொண்டால் உரிய நீதி கிடைக்காது என்றும், உச்ச நீதிமன்றத்திற்கு இந்த வழக்கினை மாற்றக் கோரியும் தெரிவிக்கப்பட்டது. மேலும் மூன்றாவது நீதிபதி வழக்கை விசாரிப்பது குறித்து வாட்ஸ்அப்பில் பல்வேறு தகவல்கள் வருவதால், இந்த வழக்கை உச்ச நீதிமன்றத்தில் விசாரிக்க வேண்டும் எனக் கோரி இருந்தனர்.

இந்த மனுவை விசாரணை செய்த நீதிபதிகள் அருண் மிஸ்ரா, எஸ்.கே.கவுல் ஆகியோர் நாங்கள் வாட்ஸ்அப்பில் என்னமாதிரியான செய்திகள் வருகிறது என்பது குறித்து ஆய்வு செய்ய விரும்பவில்லை. இந்த வழக்கு வரும் 27-ம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் எனத் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x