Last Updated : 25 Jun, 2018 11:33 AM

 

Published : 25 Jun 2018 11:33 AM
Last Updated : 25 Jun 2018 11:33 AM

திருமண வீட்டில் சாப்பாட்டுத் தட்டுக்கு ஏற்பட்ட அடிதடியில் ஒருவர் அடித்துக் கொலை; 4 பேர் காயம்

திருமண வீட்டில் சாப்பாட்டுக்கு அடித்துக்கொள்வதைக் கேள்விப்பட்டு இருக்கிறோம், ஆனால், சாப்பாட்டுத் தட்டுக்கு சண்டைபோட்டதுண்டா?

பிஹார் மாநிலத்தில் ஒரு திருமண வீட்டில், சாப்பாட்டுத் தட்டுக்கு ஏற்பட்ட சண்டையில் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்டார். 4 பேர் படுகாயமடைந்தனர்.

பிஹார் மாநிலம், பலாலியா நகரில் உள்ள விக்ரம்புரா பகுதியில் நேற்றுமுன்தினம் இரவு திருமண நிகழ்ச்சி நடந்தது. அப்போது, உணவு பரிமாறும்போது, பலருக்கு சாப்பாட்டுத் தட்டு வழங்குவதில் குழப்பம் ஏற்பட்டது. அப்போது திருமண வீட்டில் இரு பிரிவினர் சாப்பாட்டுத் தட்டுக்காக வாக்குவாதம் செய்துள்ளனர். இந்த வாக்குவாதம் கைகலப்பாக மாறி ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டதில், திருமண வீடு கலவர இடமாக மாறியது.

இதில் 5 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இவர்களை சிகிச்சைக்காக மருத்துவமனைக்குக் கொண்டு செல்கையில், ஒருவர் வழியிலேயே உயிரிழந்தார். 4 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இது குறித்து மணியார் நகர போலீஸ் இன்ஸ்பெக்டர் நகு யாதவ் கூறுகையில், ''விக்ரம்புரா பகுதியில் சனிக்கிழமை இரவு திருமண நிகழ்ச்சி நடந்தது. அப்போது திருமண வீட்டாருக்கும், விருந்தினர்களுக்கும் உணவு பரிமாறப்பட்டது.

ஆனால், நேரம் செல்ல செல்லக் கூட்டம் அதிகமாகவே விருந்தினர்கள் பலருக்கு சாப்பிடுவதற்கு தட்டு இல்லை. இது குறித்து திருமண வீட்டில் இருந்த இருபிரிவினருக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த வாக்குவாதம் திடீரென கைகலப்பாக மாறி, ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர். அதனால், திருமண வீட்டுக்கு வந்தவர்கள் அங்கிருந்து நகரத் தொடங்கினார்கள், அங்கிருந்த ஒருவர் போலீஸுக்கு தகவல் அளித்தார்.

அதன்பேரில் அங்கு நாங்கள் சென்றோம், அந்த அடிதடியில் 5 பேர் காயமடைந்தனர். அவர்களை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்கையில், விஷால் (வயது20) என்பவர் மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். மீதமுள்ள 4 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது தொடர்பாக திருமணவீட்டார் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறோம்'' எனத் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x