Published : 23 Jun 2018 08:04 AM
Last Updated : 23 Jun 2018 08:04 AM

ஜார்கண்ட்டில் விழிப்புணர்வில் ஈடுபட்ட 5 பெண்கள் பலாத்காரம் 3 நபர் குழு விசாரணை: தேசிய பெண்கள் ஆணையம் அறிவிப்பு

ஜார்கண்ட் மாநிலத்தில் 5 பெண்கள் பலாத்காரம் செய்யப்பட்டது குறித்து விசாரிக்க, தேசிய பெண்கள் ஆணையம் 3 நபர் குழுவை அமைத்துள்ளது.

ஜார்கண்ட் மாநிலத்தில் தன்னார்வ தொண்டு நிறுவனம் ஒன்று சட்டவிரோத குடியேற்றம் மற்றும் பெண்கள், குழந்தைகள் கடத்தல் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது. இந்நிறுவனத்தைச் சேர்ந்த பெண்கள் சிலர், சமீபத்தில் குந்தி மாவட்டத்தில் உள்ள கோச்சாங் கிராமத்தில் விழிப்புணர்வு பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். அப்போது பெண் குழந்தைகள் கடத்தல் தொடர்பாக நாடகம் நடத்தினர்.

அப்போது இரு சக்கர வாகனங்களில் பயங்கர ஆயுதங்களுடன் வந்த 5 பேர், துப்பாக்கி முனையில் 5 பெண்களை கடத்தி சென்றனர். சில மணி நேரங்களுக்குப் பிறகு அவர்கள் கிராமத்துக்கு திரும்பி வந்தனர். தங்களை கடத்திச் சென்றவர்கள் பலாத்காரம் செய்ததாகப் போலீஸில் புகார் தெரிவித்தனர். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த ஜார்கண்ட் போலீஸார், 3 தனிப்படைகள் அமைத்து குற்றவாளிகளைத் தேடி வருகின்றனர்.

இந்நிலையில், இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த தேசிய பெண்கள் ஆணையம், 3 நபர் குழுவை அமைத்துள்ளது. இக்குழுவினர் விரைவில் கந்தி மாவட்டத்துக்குச் சென்று விசாரணை நடத்த உள்ளனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அறிக்கை அளிக்கும்படி ஜார்கண்ட் டிஜிபி டி.கே.பாண்டேவையும் தேசிய மகளிர் ஆணையம் கேட்டுக் கொண்டுள்ளது. - பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x