Published : 23 Jun 2018 07:59 AM
Last Updated : 23 Jun 2018 07:59 AM

ஆந்திர மின்வாரிய ஊழியருக்கு ரூ.100 கோடி மதிப்புள்ள சொத்து: லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் அதிர்ச்சி

ஆந்திர மாநிலம் நெல்லூரில் மின்வாரிய ஊழியருக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் அவர் முறைகேடாக ரூ.100 கோடி சொத்துகள் சேர்த்திருப்பது தெரியவந்துள்ளது.

ஆந்திர மாநிலம், நெல்லூர் மாவட்டம், காவலி பகுதியில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் லைன் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருபவர் எஸ்.லட்சுமி ரெட்டி. இவர் 1993-ம் ஆண்டு உதவியாளராக பணியில் சேர்ந்தார். பின்னர் படிப்படியாக பதவி உயர்வு பெற்று தற்போது லைன் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார். கடந்த 25 ஆண்டுகளாக இத்துறையில் பணியாற்றும் இவர், முறைகேடாக பல கோடி சொத்துகள் சேர்த்துள்ளதாக லஞ்ச ஒழிப்பு அதிகாரிகளுக்கு புகார்கள் வந்தன.

திடீர் சோதனை

அதன்பேரில் லஞ்ச ஒழிப்பு பிரிவு டிஎஸ்பி பரமேஸ்வர் ரெட்டி தலைமையிலான குழுவினர் நேற்று முன்தினம் காலை முதல் இரவு வரை, இவரது வீட்டிலும் ஓங்கோல் மாவட்டத்தில் உள்ள இவரது உறவினர்களின் வீடுகளிலும் ஒரே நேரத்தில் அதிரடி சோதனை நடத்தினர்.

இந்த சோதனையில் லட்சுமி ரெட்டிக்கு 7 வீடுகள், பினாமி பெயரில் 50 ஏக்கர் விவசாய நிலம், காவலியில் 2 வீட்டு மனைப் பட்டா, ஓங்கோலில் 8 ஏக்கரில் இறால் பண்ணை மற்றும் வங்கிக் கணக்கில் ரூ. 9.57 லட்சம் இருப்பது தெரியவந்தது.

இவை தொடர்பான ஆவணங்கள் மற்றும் 23 சவரன் நகைகளை லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் கைப்பற்றினர். அசையா சொத்துகளின் மதிப்பு மட்டும் சந்தை நிலவரப்படி சுமார் ரூ. 100 கோடி இருக்கும் என லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x