Published : 23 Jun 2018 07:52 AM
Last Updated : 23 Jun 2018 07:52 AM

கேரளாவில் ரயில்பெட்டி ஆலை திட்டம் ரத்தானதை எதிர்த்து முதல்வர் பினராயி டெல்லியில் ஆர்ப்பாட்டம்

கேரளாவில் ரயில்பெட்டி தொழிற்சாலை திட்டம் கைவிடப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து கேரள முதல்வர் பினராயி விஜயன் நேற்று டெல்லியில் ஆர்ப்பாட்டம் நடத்தினார்.

கேரள மாநிலம் பாலக்காட்டில் ரயில்பெட்டி தொழிற்சாலை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்டகாலமாக உள்ளது. ஆனால், பாலக்காட்டில் தொழிற்சாலை அமைக்கத் தேவையில்லை என்று மத்திய அரசு முடிவு செய்ததாக செய்திகள் வெளியாயின. இதனைக் கண்டித்து டெல்லியில் ரயில் பவன் முன்பு கேரள முதல்வர் பினராயி விஜயன் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினார். அவருடன் கேரளாவைச் சேர்ந்த இடதுசாரிக் கட்சி எம்.பி.க்களும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது பினராயி விஜயன் கூறுகையில், ‘‘பாலக்காட்டில் தொழிற்சாலை அமைக்கத் தேவையில்லை என்று மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அதேசமயம், ஹரியாணாவில் தொழிற்சாலை அமைக்க முடிவு செய்துள்ளது. உத்தரபிரதேசத்தில் ரயில்பெட்டி தொழிற்சாலை அமைக்க நிலம் கோரியிருப்பதாக ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் சமீபத்தில் கூறினார். இந்த மாநிலங்களில் பாஜக ஆட்சியில் உள்ளது. ஆனால், கேரளாவில் இடதுசாரிகள் ஆட்சியில் இருப்பதால் மத்திய அரசு பாரபட்சமாக நடக்கிறது. கேரள மக்களை மத்திய அரசு தண்டிக்கிறது’’ என்றார்.

இதனிடையே, கேரளாவுக்கு ரேஷன் பொருட்கள் ஒதுக்கீடு குறித்து பிரதமர் மோடியை சந்தித்துப் பேச பினராயி விஜயனுக்கு நேரம் ஒதுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது

மாறாக, உணவுத்துறை அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வானை சந்தித்து பேசுமாறு அறிவுறுத்தியதாக கேரள அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதோடு, பிரதமரை சந்திக்க 4 முறை நேரம் கேட்டும் அனுமதி கொடுக்கவில்லை என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x