Published : 22 Jun 2018 01:16 PM
Last Updated : 22 Jun 2018 01:16 PM
ஜார்கண்ட் மாநிலத்தில் குழந்தை கடத்தல் தொடர்பாக விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்திக் கொண்டிருந்த இளம் பெண்களை ஒரு கும்பல் கடத்திச் சென்று துப்பாக்கி முனையில் கொடூரமாக பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஜார்கண்ட் மாநிலம் குந்தி மாவட்டத்தில் உள்ள கோச்சாங் என்ற கிராமத்தில் தொண்டு நிறுவனத்தை சேர்ந்த சிலர் பெண்கள் மற்றும் குழந்தை கடத்தல் தொடர்பாக மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். கடந்த 19-ம் தேதி இதுதொடர்பாக சாலையில் விழிப்புணர்வு நாடகம் ஒன்றை நடத்தினர். 5 இளம் பெண்கள் உள்ளிட்ட சிலர் இந்த நாடகத்தில் பங்கேற்று நடித்தனர். அவர்களில் ஒரு இளம் பெண் சமீபத்தில் திருமணமானவர்.
அப்போது இருசக்கர வாகனத்தில் துப்பாக்கிகளுடன் வந்த மர்ம கும்பல், அந்த பெண்களை கடத்திச் சென்றது. தனி இடத்திற்கு சென்ற அந்த கும்பல், ஐந்து பெண்களையும் துப்பாக்கியை காட்டி மிரட்டி மாறி மாறி பாலியல் பலாத்காரம் செய்துள்ளது. அதனை மொபைல் போன் மூலம் வீடியோ எடுத்து கும்பல், போலீஸிடம் புகார் செய்தால் அந்த காட்சிகளை சமூகவளைதளங்களில் வெளியிட்டு பரப்பி விடுவதாக மிரட்டல் விடுத்துள்ளது.
மூன்று மணிநேரத்திற்கு பிறகு அந்த பெண்களை அந்த கும்பல் விடுவிடுத்துள்ளது. தாங்கள் கிராமத்திற்கு திரும்பிய பெண்கள் தங்களுக்கு நேர்ந்த கொடுமையை கூறியுள்ளனர். இதையடுத்து போலீஸாருக்கு தகவல் தரப்பட்டது. இதுகுறித்து வழக்குபதிவு செய்துள்ள ஜார்கண்ட் போலீஸார் 3 தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.
தொண்டு நிறுவனங்களின் விழிப்புணர்வு பிரச்சாரத்தால் ஆத்திரப்பட்ட கும்பல் இந்த சம்பவத்தில் ஈடுபட்டதா என விசாரணை நடைபெறுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT