Published : 22 Jun 2018 07:44 AM
Last Updated : 22 Jun 2018 07:44 AM

காவிரியில் தமிழகத்துக்கு 12 ஆயிரம் கன அடி நீர் திறப்பு

கர்நாடகாவில் உள்ள கபினி அணையில் இருந்து தமிழகத்துக்கு வினாடிக்கு 12 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளதால், காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

மைசூரு மாவட்டத்தில் உள்ள கபினி அணையின் நீர்மட்டம் நேற்று 2,282.30 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 12,153 கன அடி நீர் வந்துகொண்டிருக்கும் நிலையில், வினாடிக்கு 12,375 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. இதில் தமிழகத்துக்கு காவிரியில் 12,000 கன அடி நீர் திறக்க‌ப்பட்டுள்ளதால் இரு மாநில எல்லையில் உள்ள‌ பிலிகுண்டுலுவுக்கு நீர் வரத்து கணிசமாக அதிகரித்துள்ளது.

கபினி அணையை பொறுத்தவரை அதன் மொத்த கொள்ளளவான 2,284 அடியில் 2,282 அடியை தொட்டாலே, முழு கொள்ளளவை அடைந்துவிட்டதாக அறிவிக்கப்படும். பின்னர் கர்நாடக முதல்வர் கபினி அணைக்கு சமர்ப்பண பூஜை நடத்தி, பாசனத்துக்காக நீர் அதிகளவில் திறக்கப்படும். ஆனால் இந்த ஆண்டு கடந்த 10 நாட்களுக்கு முன்பே கபினி அணையின் நீர்மட்டம் 2,281.50 அடியை தொட்டது.

ஆனால் கர்நாடக அரசு அதிகளவில் தமிழகத்துக்கு நீரை திறந்துவிட்டு அணையின் நீர் மட்டம் உயராமல் பார்த்துக்கொண்டது. இதனால் அணை முழு கொள்ளளவை எட்டுவது ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று 2,282.50 அடியை தொட்டபோதும், முழு கொள்ளளவை எட்டியதாக அறிவிக்கவில்லை. மாறாக அணையில் இருந்து அதிகளவில் நீர் வெளியேற்றப்படுகிறது. இதன் மூலம் சமர்ப்பண பூஜை நடத்துவதை கர்நாடக அரசு ஒத்தி வைத்துள்ளது.

தற்போது 103 அடியாக உள்ள கிருஷ்ணராஜசாகர் அணையின் நீர்மட்டம் 110 அடியை எட்டிய பிறகு கபினி அணைக்கு பூஜை நடத்தலாம் என முதல்வர் குமாரசாமி திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x