Published : 22 Jun 2018 07:44 AM
Last Updated : 22 Jun 2018 07:44 AM
கர்நாடக விவசாயிகளுக்கு தேவையான நீரை திறக்க காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு பிறப்பிக்கும் வரை காத்திருக்க முடியாது என முதல்வர் குமாரசாமி தெரிவித்துள்ளார்.
உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி 3 மாதங்களுக்கு பிறகு கடந்த 1-ம் தேதி மத்திய அரசு காவிரி மேலாண்மை ஆணையத்தை அமைத்தது. இதற்கு தற்காலிக தலைவர் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த ஆணையத்தில் அங்கமாக இருக்கும் தமிழகம், புதுச்சேரி, கேரளா ஆகியவை தங்களது மாநில உறுப்பினர்களின் பெயர்களை மத்திய அரசுக்கு அனுப்பியுள்ளன. கர்நாடக அரசு உறுப்பினர்களின் பெயர்களை இதுவரை அனுப்பவில்லை.
கர்நாடக முதல்வர் குமாரசாமி கடந்த சில தினங்களுக்கு முன் பிரதமர் மோடி, அமைச்சர் நிதின் கட்கரியை சந்தித்துப் பேசினார். அப்போது, “காவிரி மேலாண்மை ஆணையத்தை நாடாளுமன்ற விவாதத்துக்குப் பிறகே உருவாக்க முடியும். அந்த ஆணையத்தில் சில விதிமுறைகளை மாற்ற வேண்டும். குறிப்பாக 10 நாட்களுக்கு ஒரு முறை அணைகளின் நீர் இருப்பை ஆராய்ந்த பிறகே, ஆணையம் நீரை மாநிலங்களுக்கு பங்கிடும் என்பதை ஏற்க முடியாது. இதேபோல கர்நாடக விவசாயிகள் என்ன பயிரிட வேண்டும் என்பதை ஆணையம் தெரிவிக்கும் என்பதையும் ஏற்க முடியாது” என வலியுறுத்தினார்.
இந்நிலையில் குமாரசாமி நேற்று கூறியதாவது:
காவிரி மேலாண்மை ஆணையத்தின் முதல் கூட்டம் எப்போது தொடங்கும் என இதுவரை அறிவிக்கப்படவில்லை. இன்னும் அனைத்து மாநில உறுப்பினர்கள் அறிவிக்கப்பட்டு, அதன்பின் நிரந்தர ஆணையர் தலைவர் நியமிக்கப்பட்டு முழு வீச்சில் செயல்பட நீண்ட காலம் தேவைப்படும்.
கர்நாடக விவசாயிகளுக்கு தேவையான நீரை திறக்க காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவுக்காக எங்களால் காத்திருக்க முடியாது. எங்கள் மாநில விவசாயிகளை காப்பாற்ற வேண்டிய பொறுப்பு எனக்கு இருக்கிறது. எனவே மைசூரு, மண்டியா மாவட்ட விவசாயிகளின் பாசனத்துக்காக கிருஷ்ணராஜசாகர் அணை நீரை இன்று (வியாழக்கிழமை) திறக்க உத்தரவிட்டுள்ளேன். இது விதிமுறை மீறல் ஆகாது. ஏதாவது பிரச்சினை வந்தால் சட்ட ரீதியாக சந்திப்பேன். காவிரி நடுவர் மன்ற உத்தவின்படி, ஜூன் மாதத்தில் வழங்க வேண்டிய நீரை தமிழகத்துக்கு திறந்து விட்டுள்ளோம்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT