Published : 10 Jun 2018 08:57 AM
Last Updated : 10 Jun 2018 08:57 AM

டெல்லி உள்ளிட்ட வட மாநிலங்களில் மீண்டும் புழுதிப்புயல்: உத்தரபிரதேசத்தில் 26 பேர் பரிதாப பலி

டெல்லி, உத்தரபிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட வட மாநிலங்களில் மழையுடன் கூடிய கடுமையான புழுதிப் புயல் ஏற்பட்டது. இந்தப் புழுதிப்புயலுக்கு உத்தரபிரதேச மாநிலத்தில் இதுவரை 26 பேர் பலியாகியுள்ளனர்.

வட மாநிலங்களை புழுதிப்புயல் அண்மைக்காலமாக அடிக்கடி தாக்கி வருகிறது. குறிப்பாக, உத்தரபிரதேசம், டெல்லி, ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் கடந்த மே மாதத் தொடக்கத்தில் ஏற்பட்ட புழுதிப் புயலுக்கு 124 பேர் பலியாகினர். இதன் தொடர்ச்சியாக, 5-க்கும் மேற்பட்ட புழுதிப் புயல்கள் வட மாநிலங்களை அடுத்தடுத்து தாக்கின.

இந்த நிலையில், டெல்லி, ராஜஸ்தான், உத்தரபிரதேசம், ஹரியாணா ஆகிய மாநிலங்களை நேற்று முன்தினம் இரவு மற்றும் நேற்று மாலையில் மழையுடன் கூடிய கடுமையான புழுதிப் புயல் தாக்கியது. காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால், மேற்குறிப்பிட்ட மாநிலங்களில் நூற்றுக்கணக்கான மரங்கள் வேரோடு சாய்ந்தன. சில சிறிய வீடுகள் இடிந்து விழுந்தன.

இந்தப் புழுதிப்புயலுக்கு உத்தரபிரதேச மாநிலத்தில் இதுவரை 26 பேர் பலியாகியுள்ளனர். பலர் படுகாயமடைந்தனர். குறிப்பாக, உத்தரபிரதேசத்தின் உன்னாவ், ஜான்பூர், சுல்தான்பூர், சந்தோலி உள்ளிட்ட மாவட்டங்களில் புயலின் பாதிப்பு கடுமையாக இருந்தது. அங்கு மீட்பு நடவடிக்கைகளை அரசு முடுக்கிவிட்டுள்ளது. காயமடைந்தவர்கள் அங்குள்ள அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதனிடையே, புழுதிப்புயல் காரணமாக மேற்குறிப்பிட்ட மாநிலங்களில் சாலை, ரயில், விமானப் போக்குவரத்துகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. மேலும், டெல்லி சர்வதேச விமான நிலையத்துக்கு வர வேண்டிய 18 விமானங்கள் வேறு பாதைகளில் திருப்பிவிடப் பட்டன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x