Published : 10 Jun 2018 08:55 AM
Last Updated : 10 Jun 2018 08:55 AM
மாவோயிஸ்ட்கள் சதி காரணமாக பிரதமர் நரேந்திர மோடியின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை படுகொலை செய்த அதே பாணியில் பிரதமர் மோடியை கொலை செய்ய மாவோயிஸ்ட்கள் சதித் திட்டம் தீட்டியிருப்பது தெரியவந்துள்ளது.
இதைத் தொடர்ந்து பிரதமரின் பாதுகாப்பு தொடர்பாக உயரதிகாரிகள் முக்கிய ஆலோசனை நடத்தினர். இதில் பிரதமருக்கு தற்போது அளிக்கப்படும் பாதுகாப்பை மேலும் அதிகரிக்க முடிவெடுக்கப்பட்டது.
பிரதமர் மோடி பொது நிகழ்ச்சியில் பங்கேற்கும்போது சிறப்பு பாதுகாப்பு படை (எஸ்பிஜி) வீரர்கள் அவருக்கு நெருக்கமாக நின்று பாதுகாப்பு அளிப்பார்கள். இது முதல் அடுக்கு பாதுகாப்பு ஆகும்.
எஸ்பிஜி வீரர்கள் போன்று சிறப்பு பயிற்சி பெற்ற வீரர்கள் இரண்டாம் அடுக்கு பாதுகாப்பு அளிப்பார்கள். இவர்கள் கூட்டத்தில் பங்கேற்கும் மக்களின் உடல் அசைவுகள், நடமாட்டத்தை தொடர்ந்து கண்காணித்து கொண்டே இருப்பார்கள். மூன்றாம் அடுக்கில் தேசிய பாதுகாப்பு படை வீரர்கள் நிறுத்தப்பட்டிருப்பார்கள்.
பிரதமர் எந்த மாநிலத்துக்கு செல்கிறாரோ அந்த மாநிலத்தின் சிறப்பு அதிரடிப்படை வீரர்கள் மற்றும் துணை ராணுவப் படை வீரர்கள் பிரதமரை சுற்றி அரணாக நின்று 4-ம் அடுக்கு பாதுகாப்பு அளிப்பார்கள்.
இந்தப் பாதுகாப்பு தவிர பிரதமர் பயன்படுத்தும் கார்கள், விமானங்கள் எத்தகைய தாக்குதலையும் சமாளிக்கும் வகையில் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளன. இதனால் எந்த அச்சுறுத்தலையும் எளிதாக சமாளிக்க முடியும் என்று பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT