Published : 02 Jun 2018 08:31 AM
Last Updated : 02 Jun 2018 08:31 AM

கொல்கத்தாவில் சம்பவம்; அனுமதியின்றி பூக்களைப் பறித்ததால் மாமியாரை தாக்கிய மருமகள் கைது

அனுமதியின்றி பூக்களைப் பறித்ததால் ஆத்திரமடைந்த பெண், தனது மாமியார் மீது கொடூரமாக தாக்குதல் நடத்திய சம்பவம் கொல்கத்தாவில் அரங்கேறியுள்ளது. இந்தக் காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவின் காரியா பகுதியைச் சேர்ந்தவர் ரஞ்சித். இவர் தனது மனைவி ஸ்வப்னா பால் (40) மற்றும் தாயார் யசோதா (75) ஆகியோருடன் வசித்து வருகிறார். யசோதாவுக்கு மறதி நோய் பாதிப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது. யசோதாவை அவரது மருமகள் ஸ்வப்னா பால் தினமும் அடித்து சித்திரவதை செய்து வந்துள்ளார். இதுகுறித்து அக்கம்பக்கத்தினர் கேட்டால், அவர்களை ஸ்வப்னா பால் தரக்குறைவாக பேசியுள்ளார். இதனால், இந்த விஷயத்தில் மற்றவர்கள் தலையிடாமல் இருந்து வந்தனர்.

இந்நிலையில், மூதாட்டி யசோதா நேற்று காலையில் வீட்டுத் தோட்டத்தில் உள்ள செடிகளில் பூக்களைப் பறித்திருக்கிறார். தமது அனுமதியின்றி பூக்களைப் பறித்ததால் ஆத்திரமடைந்த மருமகள் ஸ்வப்னா பால், யசோதாவின் தலைமுடியை இழுத்தும், முகத்தில் அறைந்தும் கடுமையாகத் தாக்கி உள்ளார்.

இந்தச் சம்பவத்தை அவர்களின் வீட்டின் அருகில் இருந்த ஒருவர், தமது செல்போனில் வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் உடனடியாகப் பதிவிட்டார். இதையடுத்து, சில நிமிடங்களிலேயே இந்த வீடியோ ஆயிரக்கணக்கானோரால் பார்க்கப்பட்டு வலைதளங்களில் பகிரகப்பட்டது.

இதையடுத்து, இந்த வீடியோவைப் பார்த்த கொல்கத்தா காவல்துறையினர் உடனடியாக விசாரணை மேற்கொண்டு ஸ்வப்னா பாலை கைது செய்தனர். மேலும், யசோதாவை மீட்ட போலீஸார், அவரை முதியோர் காப்பகத்தில் சேர்த்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x