Published : 02 Jun 2018 08:28 AM
Last Updated : 02 Jun 2018 08:28 AM

சர்ச்சைக்குரிய ராமஜென்மபூமி இடத்தை தேசிய பாரம்பரிய சின்னமாக அறிவிக்கக் கோரி வழக்கு: மத்திய அரசிடம் முறையிடுமாறு நீதிபதிகள் அறிவுரை

அயோத்தியில் சர்ச்சைக்குரிய ராம ஜென்மபூமி இடத்தை தேசிய பாரம்பரிய சின்னமாக அறிவிக்கக் கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

டெல்லியைச் சேர்ந்தவர் வழக்கறிஞர் அனு மேத்தா. இவர் டெல்லி உயர் நீதிமன்றத்தில் நேற்று தாக்கல் செய்த பொதுநல மனுவில் கூறியிருப்பதாவது: அயோத்தியில் பிரச்சினைக்குரிய இடத்தை புராதன நினைவுச்சின்னம், தொல்பொருள் இடங்கள் சட்டத்தின் கீழ் தேசிய பாரம்பரிய சின்னமாக அறிவிக்கவேண்டும். அந்த இடத்தில் உள்ள பழமையான கோயில், மசூதியை தனித்தனியாக பாதுகாக்கவும், பராமரிக்கவும் மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும்.

அந்த சின்னங்களைத் தனித்தனியாக பிரிக்கும் நிலை ஏற்பட்டால், அந்த இடங்களின் புனிதத்தன்மை பாதுகாக்கப்பட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த வழக்கு நேற்று தலைமை நீதிபதி (பொறுப்பு) கீதா மிட்டல், நீதிபதி ஹரி சங்கர் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது. ஆனால் வழக்கில் சம்பந்தப்பட்டவர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது. இதுதொடர்பாக மத்திய கலாசாரத் துறை அமைச்சகத்திடம் முறையிடுமாறு கூறிய நீதிபதிகள் இந்த விவகாரம் பற்றி அடுத்த 3 மாதங்களுக்குள் மத்திய அரசு முடிவெடுக்கலாம் என்றும் தெரிவித்தனர். - பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x