Published : 02 Jun 2018 08:25 AM
Last Updated : 02 Jun 2018 08:25 AM

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு ஜூன் 6-ல் விசாரணைக்கு ஆஜராக ப.சிதம்பரத்துக்கு சிபிஐ சம்மன்

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் வரும் 6-ம் தேதி விசாரணைக்கு ஆஜராகுமாறு முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்துக்கு சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது.

ப.சிதம்பரம் மத்திய நிதி அமைச்சராக இருந்தபோது, கடந்த 2007-ல் பீட்டர் முகர்ஜி, இந்திராணி முகர்ஜி ஆகியோருக்கு சொந்தமான ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனம் ரூ.305 கோடி அந்நிய முதலீடு பெற அந்நிய முதலீட்டு வாரியத்தின் அனுமதி பெற்றது. இந்த அனுமதி முறைகேடாக வழங்கப்பட்டதாகவும் இதற்கு ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் ரூ.10 லட்சம் லஞ்சம் பெற்றதாகவும் சிபிஐ குற்றம் சாட்டுகிறது. இது தொடர்பாக கார்த்தி சிதம்பரத்தின் மீது வழக்குப் பதிவு செய்த சிபிஐ, கடந்த பிப்ரவரி 28-ம் தேதி அவரை கைது செய்தது. பின்னர் அவர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார்.

இந்த வழக்கில் ப.சிதம்பரத்தின் பங்கு தொடர்பாகவும் சிபிஐ விசாரித்து வந்தது. இந்நிலையில் இந்த வழக்கில் ப.சிதம்பரம் தனக்கு முன் ஜாமீன் கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தை கடந்த புதன்கிழமை நாடினார். இதில் அவரை ஜூலை 3-ம் தேதி வரை கைது செய்யக் கூடாது உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் வரும் 6-ம் தேதி விசாரணைக்கு ஆஜராகுமாறு ப.சிதம்பரத்துக்கு சிபிஐ நேற்று நோட்டீஸ் அனுப்பியது. ப.சிதம்பரம் மே 31-ம் தேதி விசாரணைக்கு அழைக்கப்பட்டதாகவும் ஆனால் அவர் வேறொரு தேதி கோரியதால் வரும் 6-ம் தேதி அழைக்கப்பட்டுள்ளதாகவும் சிபிஐ வட்டாரங்கள் தெரிவித்தன. - பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x